தேசிய நூலக வாரியம் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்கும் அரசாங்கத்தின் முக்கிய அமைப்புகளில் ஒன்று. இது தமிழ்ச் சமூகத்திற்கு நேரடியாக சேவை செய்து, அதனை ஒரு கற்றல் சமூகமாக மாற்றுவதற்கும் அறிவார்ந்த நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் உதவுகிறது. தமிழ்ச் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழ் மொழிச் சேவைகள் என்னும் சிறப்புப் பிரிவையும் கொண்டுள்ளது.
தேசிய நூலக வாரியத்தின் கதை சிங்கப்பூர் நூலகத்திலிருந்து தொடங்குகிறது. அது ஒரு தனியார் நூலகமாக இருந்து, 1874-ஆம் ஆண்டு பொது நூலகமாக மாறியது. பிறகு, நூலகத்துடன் ஒரு புதிய அருங்காட்சியகம் சேர்க்கப்பட்டு, அந்த இணைந்த அமைப்புக்கு ராஃபிள்ஸ் நூலகம், அருங்காட்சியகம் எனப் பெயரிடப்பட்டது. ஸ்டாம்ஃபர்ட் சாலையில் அமைந்த புதிய கட்டடத்தில் 1887-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. எனினும், 1955-இல், காலனித்துவ அரசாங்கம் அருங்காட்சியகத்தை நூலகத்திலிருந்து பிரித்தது. அந்தக் காலக்கட்டத்தில், தமிழ் நூல்கள் ஏற்கெனவே நூலகச் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்தன. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், ஒரே தேசிய நூலகத்தில் இருந்த இந்த தமிழ் நூல்கள் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் கருவூலமாக மாறின.
சிங்கப்பூர் தன்னாட்சி பெற்ற ஓர் ஆண்டுக்குப் பிறகு, 1960-இல், நூலகம் அருங்காட்சியகத்திற்கு அருகில் தனது சொந்தக் கட்டடத்திற்கு இடம் மாறியது. அப்போது, தமிழ்ச் சேவை வளர்ச்சியடைந்து நூலகத்தின் முக்கியத் தளத்தில் பல அடுக்குகளை நிரப்பியிருந்தது. அதோடு, மேற்கோள் பிரிவில் ஒரு சிறப்புச் சேகரிப்பும் இருந்தது.
பின்னர், அரசாங்கம் தேசிய நூலகத்தின் நோக்கத்தையும் சேவைகளையும் விரிவுபடுத்த முடிவுசெய்து, அதனை ஒரு வாரியமாக மாற்றியதன் விளைவாக தேசிய நூலக வாரியம் 1995-இல் நிறுவப்பட்டது. சிங்கப்பூரின் பிற அதிகாரப்பூர்வ மொழிகளுடன் சேர்த்து, தமிழுக்கும் தேசிய நூலக வாரியத்தில் இடமளிக்கப்பட்டது. தமிழ் நூல்கள் அதன் பல கிளைகளில் இடம் பெற்றிருந்தன. தாய்மொழிகளான மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவற்றுக்கு மேலும் ஊக்கம் அளிக்க, 2016-ஆம் ஆண்டில், தனித்தனித் தாய்மொழித் துறைகள் நிறுவப்பட்டன. தற்போது தமிழ் மொழிச் சேவைகள் துறை சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்திற்காகப் பல்வேறு அம்சங்களை நிர்வகிக்கிறது. நூல்களுடன் சேர்த்து, ஒலி, ஒளிப்பதிவுகள், கையெழுத்துப் பிரதிகள், வரலாற்று ஆவணங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வளங்களையும் அது சேகரிக்கிறது. புதிய தகவல் தொழில்நுட்பங்களின் உதவியுடன், தமிழ்ச் சமூகத்தின் புதிய தேவைகளைப் பூர்த்தி செய்ய அது ஒரு மின் நூலகத்தையும் உருவாக்கி வருகிறது.
தற்போது, தமிழ் மொழிச் சேவைகள் சிங்கப்பூரின் 28 பொது நூலகங்களில் உள்ள சுமார் 300,000 தமிழ் நூல்களைப் பராமரிக்கிறது. நான்கு வட்டார நூலகங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 15,000 தமிழ் நூல்களையும் வணிக வளாக நூலகங்கள் ஒவ்வொன்றும் சுமார் 10,000 நூல்களையும் கொண்டுள்ளன.
தனது நூல் வளங்களை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ் மொழிச் சேவைகள் பரந்த அளவிலான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்துகிறது. சில நடவடிக்கைகள் தேசிய நூலக வாரியத்தின் முக்கிய திட்டங்களின் ஒரு பகுதியாக உள்ளன. அவற்றில் தேசிய வாசிப்பு இயக்கம், வாசிப்புத் திருவிழா, ஒரு கதை, புக் பக்ஸ் ஆகியவை அடங்கும். தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் பண்பாட்டு, பாரம்பரியத் தொடர், இளையர் வாசிப்புத் தொடர், பள்ளியில் வாசிக்கும் திட்டம், தமிழ் கதை சொல்லல் அமர்வுகள், தமிழ் சிறுவர் நூல் மன்றங்கள், மின் கதை சொல்லல் முயற்சிகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. தமிழ் மொழிச் சேவைகளை வழிநடத்த, தேசிய நூலக வாரியம் 2016-இல் தமிழ் ஆலோசனைக் குழுவை நிறுவியது. இந்தக் குழு நூலகங்களில் கிடைக்கும் தமிழ் சேகரிப்புகளை மதிப்பாய்வு செய்வதோடு உத்திபூர்வ ஆலோசனைகளையும் வழங்குகிறது. மேலும், நூல்களின் உள்ளடக்கம் சார்ந்த பரிந்துரைகளையும் வழங்குகிறது. நூலகத்தின் பல முன்னோடி முயற்சிகளில் இந்தக் குழு முக்கியப் பங்கு வகித்துள்ளது.
தமிழ் மொழிச் சேவைகள், 2022-ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் ஆகப்பெரிய தமிழ் வளங்களைக் கொண்ட தமிழ்ச் சோலை என்னும் பகுதியை உருவாக்கி, உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் அறிமுகப்படுத்தியது. தமிழ்ச் சோலையில் சுமார் 20,000 சமகால, செவ்விலக்கியப் படைப்புகள் உள்ளன. நூல்களைத் தவிர்த்து 22 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளின் நிரந்தரக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. தமிழ்ச் சோலை, 16 ஏப்ரல் 2022 அன்று, தொடர்பு, தகவல் அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான ஜோசஃபின் டியோவால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் மொழிச் சேவைகள் பரந்த அளவிலான சேவைகளை வழங்குவதற்காக, தேசியக் கலை மன்றம், வளர்தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல், மேம்பாட்டுக் குழு போன்ற பிற அரசு நிறுவனங்களுடனும் சமூகப் பங்காளிகளுடனும் நூலகத் தன்னார்வலர்களுடனும் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது.
தமிழ் மின்மரபுடைமைக் குழு என்ற சமூகக் குழுவுடன் இணைந்து, தேசிய நூலக வாரியம் தமிழ் மின் மரபுடைமைத் திட்டத்தை உருவாக்கியது. ஐந்து ஆண்டுகளில், இத்திட்டம் சிங்கப்பூரின் தமிழ் இலக்கியம், நாடகம், இசை, நடனம் ஆகியவற்றின் மின் தொகுப்புகளை உருவாக்க வழிவகுத்தது. இத்தொகுப்புகள் தமிழ்ச் சமூகத்திற்கான பண்பாட்டுக் களஞ்சியங்களாக மட்டுமின்றி, சிங்கப்பூரின் பண்பாடுகள் குறித்த தேசியத் தொகுப்புகளுக்கும் வளம் சேர்க்கின்றன.
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு கூட்டுத் திட்டம். தமிழ் மின்மரபுடைமைக் குழுவினரால் தொடங்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் கைகோத்து தேசிய நூலக வாரியம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாக்கிய இந்த இணைய வளத்தை 2 ஆகஸ்ட் 2025 அன்று சிங்கப்பூர்க் குடியரசு அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வெளியிட்டார்.
மேல்விவரங்களுக்கு
“History of National Library Singapore.” National Library Board Singapore. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/visit-us/our-libraries-and-locations/libraries/national-library-singapore/about/history-of-national-library
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |