எஸ். ஜெயகுமார்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

எஸ். ஜெயகுமார் என அறியப்படும் சண்முகம் ஜெயகுமார் (பி. 1939) சட்டம், தொழிலாளர், உள்துறை, வெளியுறவு ஆகிய துறைகளுக்கான அமைச்சராகவும் துணைப்பிரதமர், தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், மூத்த அமைச்சர் ஆகிய முக்கியப் பதவிகளை வகித்தும் சிங்கப்பூருக்குப் பங்களித்தவர். சிண்டா அறங்காவலர் குழுவின் முதல் தலைவராகப் பணியாற்றியவர்.

சிங்கப்பூரில் பிறந்த ஜெயகுமார் ராஃபிள்ஸ் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தின் சட்டப் புலத்தில் பயின்று, 1963-இல் முதல் மாணவராக இளநிலைப் பட்டத் தேர்ச்சிபெற்று, அங்கேயே அடுத்த சுமார் ஏழாண்டுகள் (1964-71) விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜெயகுமார், அக்காலக்கட்டத்தில், யேல் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுநிலைப் பட்டமும் பெற்று (1966), சட்டப் புலத்தின் துணைத்தலைவராக உயர்ந்தார். பின்னர், 1971-இல், வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் சிங்கப்பூரின் நிரந்தரத் தூதராக மூன்றாண்டுகள் பணியாற்றித் திரும்பியவர், சட்டப் புலத்தின் தலைவராக 1974 முதல் 1980 வரை பணியாற்றினார். அவ்வாண்டு அரசியலுக்குச் சென்றவர், மக்கள் செயல் கட்சி வேட்பாளராக பிடோக் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அடுத்த ஆண்டே சட்ட, உள்துறைத் துணையமைச்சராகப் பதவியேற்ற அவர், 1983-இல் இடைக்காலத் தொழிலாளர் அமைச்சராக நியமிக்கப்பட்டு, 1984-இல் அத்துறையின் அமைச்சராக உயர்ந்தார். 

அப்போது, முதுமையில் மத்திய சேமநிதியிலிருந்து மீட்டுக்கொள்ளக்கூடிய தொகை தொடர்பாக அவர் கொண்டுவந்த மாற்றம் ‘ஜெயா சூத்திரம்’ என்று வருணிக்கப்பட்டது. பிறகு சுமார் பத்தாண்டுகள் (1985-94) உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில் ஹோட்டல் நியூ வோர்ல்ட் இடிந்தது (1986), ‘மார்க்சிய சதித்திட்டம்’ (1987), சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் (1991) எனப் பெரும் பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டார். பிறகு சுமார் இருபதாண்டுகளுக்குச் சட்ட அமைச்சராகவும் (1988-2008), வெளியுறவு அமைச்சராகவும் (1994-2004) பணியாற்றினார். இடையே, 2004-இல் துணைப்பிரதமராகவும் நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருக்கும்போதே தேசப்பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் (2005-2010). துணைப்பிரதமர் பதவியிலிருந்த அவர் 2009-இல், மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஈராண்டுகளில் அரசியலிலிருந்து ஓய்வுபெற்று, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழத்தில் கெளரவப் பேராசிரியராகவும் சட்டத்துறை ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.

ஜெயகுமார் சிங்கப்பூரின் சட்ட அமைச்சராகப் பதவி வகித்தபோதுதான், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முறை, குழுத்தொகுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை ஆகிய அரசமைப்புத் திருத்தங்களும் சமய நல்லிணக்கம் பேணும் சட்டத் திருத்தமும் நிறைவேற்றப்பட்டன. வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் மலேசியாவுடன் ரயில்பாதை நிலம் கையகப்படுத்துதல், தண்ணீர்ப் பிரச்சினை, பெட்ரா பிராங்கா தீவு எல்லைப் பிரச்சினை, இந்தோனேசியாவுடன் காட்டுத்தீ புகைமூட்டப் பிரச்சினை, பிலிப்பீன்ஸுடன் அந்நாட்டுப் பணிப்பெண் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட பிரச்சினை எனச் சிக்கலான விவகாரங்களைச் சிங்கப்பூருக்குச் சாதகமான முறையில் கையாண்டதற்காகப் பெரிதும் பாராட்டப்பட்டார். 

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்க அறங்காவலர் குழுவின் முதல் தலைவராக 17 ஆண்டுகள் (1991-2008) பணியாற்றிய ஜெயகுமார், சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்ற நிரந்தர உறுப்பினராகவும் 13 ஆண்டுகள் (1998-2011) பங்களித்தவர். வளர்தமிழ் இயக்கத்தின் தலைமை ஆலோசகராகப் பணியாற்றியதுடன் தமிழ்மொழி விழாவை மாதம் முழுதும் நடக்கும் நிகழ்வாக மாற்றியதிலும் ஜெயகுமாருக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. தம் பணிகளுக்காக, பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (1980), சிங்கப்பூர்-ஜப்பான் நல்லுறவு மேம்பாட்டுக்காக ஜப்பான் அரசரால் அளிக்கப்பட்ட விருது (2012) உட்பட பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். சுமார் 30 ஆண்டுகள் நீண்ட பொதுச்சேவையில், சிங்கப்பூரின் முதல் மூன்று பிரதமர்களுடன் பணியாற்றிய ஜெயகுமார் ஓய்வுபெற்றபோது, “நெருக்கடிகளை அமைதியாகவும் தீர்க்கமாகவும் சமாளித்த தலைவர்” என்றும் அமைச்சரவைக்கு “வழிகாட்டியாகத்” திகழ்ந்தவர் என்றும் அன்றையப் பிரதமர் லீ சியன் லூங் அவரைப் பாராட்டினார். 



மேல்விவரங்களுக்கு
Koh, Tommy, Timothy Auger and Jimmy Yap. Singapore: The Encyclopedia. Singapore: Editions Didier Millet, 2007
Jayakumar, S. Be At The Table Or Be On The Menu: A Singapore Memoir. Singapore: Straits Times Press, 2015 
சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர். தொகுப்பாசிரியர்கள்: பேராசிரியர் அ.வீரமணி, மாலதி பாலா, மா. பாலதண்டாயுதம். சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம், 2019

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.

 





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA