சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் செயல்படும் ஒரு சுய உதவிக் குழு. கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தும் சிண்டா, அனைத்து இந்திய இனக் குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் சேவையாற்றுகிறது. சேவை பெறுவோரில் பெரும்பான்மையினர் தமிழர்கள்.
சமூகத்தில் வசதி, வாய்ப்புக் குறைந்தோரின் ஆற்றலை அதிகபட்ச அளவுக்கு மேம்படுத்தவும் அவர்கள் தொடர்ந்து முன்னேறவும் சிண்டா பல்வேறு திட்டங்களின் மூலம் உதவி செய்கிறது. மேலும், சிங்கப்பூரின் பிற இன சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் உதவ முற்படுகிறது.
சிண்டா முதலில் ஜூலை 1990-இல் ஒரு சங்கமாக நிறுவப்பட்டது. முன்னாள் அமைச்சர்களான எஸ். தனபாலனும், எஸ். ஜெயக்குமாரும் சிண்டாவின் முதல் புரவலர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சந்திரதாசும், எஸ். வாசுவும் அதன் ஆலோசகர்களாகவும் பணியாற்றினர். நிர்வாகச் செயற்குழுவுக்கு ஈ. சுகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவராக அப்துல் ரஷீத் கனி, செயலாளராக ஆர். சங்கர், பொருளாளராக வி.வி. கிரி ஆகியோர் பணியாற்றினர்.
தொடக்கத்தில், சிண்டா மூன்று திட்டங்களில் கவனம் செலுத்தியது. முதலாவது, குடும்பங்களும் தனிநபர்களும் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க உதவுவதற்காக அமைக்கப்பட்ட சிண்டா குடும்பச் சேவை நிலையம். இரண்டாவதாக, திறன்மிக்க இந்திய மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள் மேலும் சிறந்து விளங்கத் தேவையான ஆதரவை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘ப்ராஜெக்ட் வித்யா’. மூன்றாவது ‘குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் இந்தியக் குழந்தைகள்‘ என்னும் திட்டம். வேலைக்குச் செல்லும் இந்தியப் பெற்றோர், தரமான குழந்தைப் பராமரிப்புக்குப் பாதுகாப்பான, ஆரோக்கியமான, ஊக்கம்மிக்க சூழலை வழங்கக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களுக்குக் குழந்தைகளை அனுப்புவதை ஊக்குவிக்கும் திட்டம்.
மேலும், உறுப்பினராகச் சேர்ந்து சிண்டாவுக்கு ஆதரவளிக்க அனைத்து இந்தியர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கைத் திட்டம் ஒன்றும் தொடங்கப்பட்டது. ஒரு லாப நோக்கற்ற அமைப்பு என்னும் முறையில் சிண்டா, வருவாய்க்கு உறுப்பினர் சந்தாக்களையும் புரவலர்கள், நலம்விரும்பிகளின் நன்கொடைகளையுமே பெரிதும் நம்பியிருந்தது. ஏனைய இந்திய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுச் சமூக, பொதுநல, கல்வித் துறைகளில் இந்தியச் சமூகத்திற்குச் சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிண்டாவின் மறுசீரமைப்பு
ஆகஸ்ட் 1990-இல் சிண்டா உருவாக்கப்பட்ட அதே சமயத்தில், சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் குறைபாட்டுச் சிக்கல்களைக் கண்டறியவும் கல்வித்திறனை மேம்படுத்த ஒரு செயல் திட்டத்தை முன்வைக்கவும் ஜே.ஒய். பிள்ளை தலைமையில் இந்தியர் கல்வி செயல்திட்டக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. குழு தனது அறிக்கையை ஜூன் 1991-இல் சமர்ப்பித்தது. அரசாங்கம் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டதோடு, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் ஓர் ஒருங்கிணைப்பு அமைப்பாகச் சிண்டாவை மறுசீரமைக்கவும் முடிவுசெய்தது. மேலும், அனைத்து இந்தியர்களும் சிண்டாவின் திட்டங்கள், சேவைகளுக்கு நிதியளிக்க ஏதுவாக ஒரு சமூக நிதியை உருவாக்கவும் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.
மறுசீரமைக்கப்பட்ட சிண்டாவின் புதிய செயற்குழு, ஆகஸ்ட் 1991-இல் செயல்படத் தொடங்கியது. ஜே.ஒய். பிள்ளை அதன் தலைவரானார். என். வரப்பிரசாத்தும் ஈ. சுகுமாரும் முறையே கல்விப் பிரிவுக்கும் குடும்ப மேம்பாடு, சமூகநலப் பிரிவுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். மறுசீரமைப்புக்குப் பிறகு, சிண்டா அதன் முதல் ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரியாக எஸ். ஈஸ்வரனை நியமித்தது.
ஜனவரி 1992-இல், கல்வித்திறன் மேம்பாட்டுக்கான ‘ஸ்டெப்’ துணைப்பாட வகுப்புகளை சிண்டாவின் கல்விப் பிரிவு தொடங்கியது. தீவு முழுவதும் சிண்டாவின் துணைப்பாட மையங்கள் நிறுவப்பட்டன. தங்கள் குழந்தைகள் கல்வி கற்பதற்கு உகந்த வீட்டுச் சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பெற்றோருக்குக் உணர்த்துவதும் திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று. குடும்ப மேம்பாடு, சமூகநலப் பிரிவு, இளம் தம்பதியருக்குத் திருமணப் பட்டறைகளைத் தொடங்கி, மேம்பட்ட குடும்ப உறவுகளுக்கான வாழ்க்கைக் கல்வியை வழங்கியது. சிண்டா அக்டோபர் 1992-இல் அறநிறுவனத் தகுதியைப் பெற்றது.
திட்டங்கள், சேவைகளின் விரிவாக்கம்
சிண்டா, 2000-ஆம் ஆண்டு வாக்கில், பட்டறைகள், ஆலோசனை, வழிகாட்டல் எனப் பல்வேறு வழிகளில் ஒரு முழுமையான சமூக ஆதரவை வழங்கும் வகையில் செயல்படத் தொடங்கியது. ஆங்கிலம், கணிதம், அறிவியல், தமிழ் ஆகிய பாடங்களில் மாணவர்களுக்கு உதவ ‘ப்ராஜெக்ட் டீச்’ திட்டம், இந்திய ஒற்றைப் பெற்றோருக்கும் அவர்தம் பிள்ளைகளுக்கும் நம்பிக்கையை வளர்க்கும் ‘ப்ராஜெக்ட் அதீனா’ திட்டம், குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்குப் பள்ளித் தேவைகளை வழங்கும் ‘பள்ளி திரும்பும் விழா’ ஆகியவையும் தொடங்கப்பட்டன.
இந்திய இளையரை ஊக்குவிக்க 2010-இல் சிண்டா இளையர் மன்றம் தொடங்கப்பட்டது. மன்றம், இளையருக்கான பல்வேறு நிகழ்ச்சிகளையும் முகாம்களையும் ஏற்பாடு செய்தது. இந்தக் காலக்கட்டத்தில், நான்கு இன சுய உதவிக் குழுக்களின் கூட்டுத் துணைப்பாடத் திட்டத்தின்வழி, அனைத்து இன மாணவர்களுக்கும் துணைப்பாட மையங்களில் இடமளிக்கப்பட்டது.
சமூகத்தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வளர்ச்சி
தொடங்கப்பட்டு சுமார் இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சிண்டா, கல்வித் திறன் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருந்தாலும், சிங்கப்பூர் இந்தியரின் சமுதாய முன்னேற்றம், அவர்களுடைய ஆற்றலை அதிகபட்சமாக்குதல் சார்ந்த தேவைகள் இன்னும் தொடர்ந்தன. சமூக முன்னேற்றத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்க, ‘சிண்டா 2020 செயல்திட்ட மறுஆய்வு’ 2010-இல் தொடங்கப்பட்டது. தேவைகளைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் பன்முக, பன்முனை அணுகுமுறைகளை இந்த மறுஆய்வு பரிந்துரைத்தது. பாலர் பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்துதல், துணைப்பாட வகுப்புகளை வலுப்படுத்துதல், இளையர், குடும்ப மேம்பாட்டை முன்னிறுத்துதல் ஆகியவை பரிந்துரையில் அடங்கும். பரிந்துரையையொட்டி, சிண்டா தன் திட்டங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைச் செய்துள்ளது.
அத்தகைய முயற்சிகள், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்குக் கல்வி, சமூதாயம், வளப்படுத்துதல் சார்ந்த பல்வேறு திட்டங்களை வழங்குவதற்காகப் பலரோடும் இணைந்து செயல்படும் ஒரு முன்னணி அமைப்பாகச் சிண்டாவின் நிலையை உறுதிப்படுத்தின. ஒவ்வோர் ஆண்டும் இந்தியச் சமூகத்தில் சுமார் 25,000 பயனாளிகளுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் சிண்டா சேவையாற்றுகிறது.
மேல்விவரங்களுக்கு
Singapore Indian Development Association. Accessed on 1 August 2025. (n.d.). https://www.sinda.org.sg/
Perera, Audrey. A place in the community: SINDA at 20 looking back moving forward. Singapore: Singapore indian Development Association, 2011
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |