பாலகிருஷ்ணன் என்னும் இயற்பெயருடைய மா. இளங்கண்ணன் (பி. 1938) தென்கிழக்காசிய எழுத்து விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர். நாற்பது ஆண்டுகளுக்குமேல் நீண்ட எழுத்துப் பயணத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் சில நாவல்களையும் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் பிறந்த இளங்கண்ணன் இரண்டு வயதில் குடும்பத்துடன் தமிழகம் சென்றுவிட்டார். இரண்டாம் உலகப்போர் முடிந்தபிறகு சிங்கப்பூர் திரும்பியவர் கலைமகள் தமிழ்ப்பள்ளியில் எட்டாம் வகுப்புவரை பயின்றார். பிறகு பிரிட்டிஷ் ராணுவத்தளத்தில் கிடங்குக் காப்பாளராகச் சுமார் பத்தாண்டுகள் (1957-67) வேலை பார்த்தார். இக்காலக்கட்டத்தில் தொண்டன் என்ற மாதமிருமுறை கலை, இலக்கிய இதழை 1964-இல் தொடங்கி அதன் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் சிலகாலம் இருந்துள்ளார். அதில் அவருடைய படைப்புகளும் வெளிவந்தன. பிறகு 1967-இல் அன்றைய கலாசார அமைச்சின் மொழிபெயர்ப்புப் பிரிவில் தமிழ்த் தட்டச்சராகச் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
தமிழ் முரசு ஆசிரியராக இருந்த வை. திருநாவுக்கரசு கலாச்சார அமைச்சின் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரிவின் தலைவரானபோது, அவருடைய ஊக்கத்தால், எழுதுவதற்கு மேலும் உந்தப்பட்டதாக இளங்கண்ணன் குறிப்பிட்டுள்ளார். மரபுக் கவிதைகள், கட்டுரைகளை முதலில் எழுதிப் பிறகு சிறுகதை எழுதத் தொடங்கினார். இளங்கண்ணனின் சிறுகதை “தீவலி” 1967-இல் தமிழ் முரசில் வெளியானது. தொடர்ந்து இவ்வட்டாரத்திலும் தமிழகத்திலும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அவரது சிறுகதைகளும் தொடர்களும் வெளிவந்தன. இளங்கண்ணனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வழி பிறந்தது (1975). அலைகள் (1976) அவரது முதல் நாவல். ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்காலப் பின்னணியைக் கொண்ட இவரது வைகறைப் பூக்கள் (1990) நாவல் ஆங்கிலம் (Flowers at Dawn), மலாய், துருக்கி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தூண்டில் மீன் சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கியப் பரிசை (2004) வென்றது. சிங்கப்பூர்ப் பள்ளிகளின் தமிழ்ப்பாட நூல்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. எழுத்துப் பங்களிப்புகள் மட்டுமின்றி, இலக்கியக் களம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆகிய இலக்கிய அமைப்புகள் முறையே 1975, 1976 ஆண்டுகளில் தொடங்கப்பட்டபோது அவற்றின் நிறுவன உறுப்பினராகவும் செயலாற்றியுள்ளார். படைப்பிலக்கியம் குறித்த பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
இளங்கண்ணன் தம் இலக்கியச் சேவைகளுக்காகத் தென்கிழக்காசிய எழுத்து விருது (1982), தமிழவேள் விருது (2000), கரிகாற்சோழன் விருது (2013) எனப் பல விருதுகளுடன் ஆக உயரிய கலை விருதான கலாசாரப் பதக்கத்தையும் (2005) பெற்றுள்ளார். நவீன சிங்கப்பூரின் தொடக்கக்காலச் சமுதாயத்தையும் பண்பாட்டுப் பன்மைத்துவத்தையும் விரிவாகச் சித்திரித்ததற்காகப் பெயர்பெற்ற இளங்கண்ணன், சமுதாய மாற்றங்களுக்கேற்ப அவரது பிற்காலப் படைப்புகளில் புலம்பெயர் தொழிலாளர் சிக்கல்கள் போன்ற கருப்பொருள்களையும் தம் படைப்புகளில் கையாண்டதற்காகப் பாராட்டப்படுகிறார்.
மேல்விவரங்களுக்கு
Koh Tommy, Timothy Auger, Jimmy Yap, and Wei Chian Ng, eds. Singapore: The Encyclopedia. Editions Didier Millet and National Heritage Board, 2006. (Call no. 959.57003 SIN -[HIS])
“M. Balakrishnan.” Wikipedia. Accessed on 1 August 2025. https://en.wikipedia.org/wiki/M._Balakrishnan
“M. Balakrishnan (Ma Ilangkannan) A well-respected author of Tamil-language fiction in Singapore.” Offstage. 23 November 2021. https://www.esplanade.com/offstage/arts/m-balakrishnan-ma-ilangkannan
மீண்டு நிலைத்த நிழல்கள், நேர்காணல்கள் தொகுப்பு: ம. நவீன், வல்லினம் வெளியீடு, 2018
திருமுருகானந்தம், கோட்டி. சிங்கப்பூர் இதழியல் வரலாறு. சென்னை: பாஸ் ஃபவுண்டேஷன், 2019
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |