சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் (சி.த.எ.க.) 1976-இல் தொடங்கப்பட்டு இடையறாது செயற்பட்டுவருகிறது. இக்கழகத்தை நிறுவியவர்களுள் முக்கியமானவர்கள் வி. இக்குவனம், மெ. சிதம்பரம், இராம. பெரியகருப்பன், த. பாவாடைசாமி, ந. பழநிவேலு, ஏ.பி. இராமன், பக்ருதீன் சாகிப், இரா. துரைமாணிக்கம் உள்ளிட்டோர். எழுத்தாளர் நலனையும், தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது சுமார் 115 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் 90 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் வாழ்நாள் உறுப்பினர்கள். 

இலக்கிய வளர்ச்சிக்காகவும், மாணவர்களிடம் தமிழ்மொழி ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை பல்வேறு போட்டிகள், பட்டிமன்றம், கவியரங்கம், ஆய்வரங்கம், பயிலரங்கு போன்ற பல்வேறு வடிவங்களில் நிகழ்ச்சிகளை சி.த.எ.க. ஏற்பாடு செய்துவருகிறது. மேலும், சிறுகதை, கவிதை, பாட்டுத் திறன், பாடல் எழுதும் திறன் ஆகிய போட்டிகளையும் நடத்திப் பல பரிசுகளையும் விருதுகளையும் வழங்கிவருகிறது.

முத்தமிழ் விழா, கம்பன் விழா, கண்ணதாசன் விழா ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை நடத்திவரும் சி.த.எ.க., மற்ற அமைப்புகளுடன் இலக்கிய நிகழ்வுகளையும், தேசியக் கலை மன்றம், தேசிய நூலக வாரியம் போன்ற அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, வாசிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது. மேலும், மாதந்தோறும் நடத்தும் ‘கதைக்களம்’ என்னும் சிறுகதை இலக்கியத் தொடர்பயிற்சி நிகழ்ச்சிகளிலும் மாணவர்களின் பங்களிப்பை அதிகரித்து வருவதிலும் முனைப்பைக் காட்டுகிறது. நூல்களை வெளியிடுவதும், அறிமுகப்படுத்துவதும் கழகத்தின் மற்றொரு பணியாகும். மேலும், முதன் முதலாக உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை 2011-இல் நடத்தியதும் சென்னைப் புத்தகக் காட்சியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க தேர்ந்தெடுக்கப்பட்டதும் சி.த.க.வின் இரு குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். 

தமிழ் முரசு நிறுவனர் தமிழவேள் கோ. சாரங்கபாணியின் நினைவாக ‘தமிழவேள் விருது’, உள்ளூர்த் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதேபோன்று, ஆனந்த பவன் நிறுவனர் மு.கு. இராமச்சந்திரா பெயரில், சிறுகதை, கவிதை, கட்டுரை  துறைகளில், சுழல் முறையில், ஆகச் சிறந்த படைப்புகளுக்கு, ‘மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு’ வழங்கப்படுகிறது. மேலும், இளையர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 2012-ஆம் ஆண்டு முதல் ‘கவியரசு கண்ணதாசன் விருது’ 40 வயதுக்குக் கீழுள்ள படைப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சி.த.எ.க. மற்ற சில அமைப்புகளுடன் இணைந்து, 2025-இல், சிங்கப்பூரின் 60-ஆம் சுதந்திர விழாவை முன்னிட்டு, SG60 தமிழ்ப் புத்தகத் திருவிழா என்னும் பெரும் புத்தகக் கண்காட்சியைப் படைத்தது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பதிப்பகங்கள் பங்கேற்றன. 




மேல் விவரங்களுக்கு
Singapore Tamil Writers' Association. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மலர்: 1976–2001. சிங்கப்பூர் : சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், 2001. (Call no.: RSING 331.88113711 SIN)
Singapore Tamil Writers' Association. (n.d.). Official website. Accessed on August 1, 2025. http://singaporetamilwriters.com


To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA