சிலோன் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் வரலாறு 1850-கள்வரை செல்கிறது. ஶ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு அடுத்துச் சிங்கப்பூரின் இரண்டாவது பழமைவாய்ந்த கோயில். இலங்கைத் தமிழர்களால் நிறுவப்பட்ட அக்கோயில் சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு குளத்தின் கரையில் நின்ற ஒரு செண்பக மரத்தின் அருகில் 1850-களில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையைக்கொண்டு உருவான கோயில் என்று கூறப்படுகிறது. செண்பகமரம் ஶ்ரீ செண்பக விநாயகர் கோயிலின் தலவிருட்சமாக அடையாளம் காணப்பட்டது. இலங்கைத் தமிழரான எதிர்நாயகம் பிள்ளை ஆலயத்தை நிறுவியவராக அறியப்படுகிறார். மரச்சட்டங்களும் அத்தாப்புக்கூரையும் கொண்ட கட்டடமாகத் தற்போதுள்ள இடத்திற்கு 1913-இல் கோயில் இடம் மாறியது. அதனைக் காங்கிரீட் கட்டடமாக மாற்ற சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கத்தில்1923-இல் ஒரு குழு அமைக்கப்பட்டது. அடுத்த சுமார் ஏழாண்டுகளில் கோயில் முழுமையடைந்து 1930-இல் முதல் குடமுழுக்கு நடந்தது.
வழிபாடுகள், விழாக்களுடன் இதர சமூகத் தேவைகளுக்காகவும் கோயில் தன் சேவைகளை விரிவுபடுத்தியது. பணியாளர்களுக்குத் தங்கும் வசதிகளும் ஒரு நூல் நிலையமும் 1939-இல் உருவாக்கப்பட்டன. செண்பக விநாயகர் ஆலயத் தமிழ்ப் பள்ளி 1940-இல் பதிவு செய்யப்பட்டு சமய நிகழ்ச்சிகளையும் வகுப்புகளையும் நடத்தியது. இரண்டாம் உலகப்போரின்போது சேதமடைந்த கோயிலின் கட்டடம் போருக்குப்பின் கட்டங்கட்டமாகச் சீரமைக்கப்பட்டு 1955-இல் இரண்டாம் குடமுழுக்கைக் கண்டது. தொடர்ந்து, 1960, 70, 80-களில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் 12 ஆண்டுக்கொருமுறை குடமுழுக்கும் நடைபெற்றன. மேலும், ராஜகோபுரம், பல்நோக்கு மண்டபம், திருமண அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டன. ராஜகோபுரத்தை அன்றைய மூத்த அமைச்சர் எஸ். ராஜரத்தினம் 1989-இல் திறந்துவைத்தார்.
சீனக் கட்டடக் கலைஞர் பிரிசில்லா சோவ் இந்திய ஸ்தபதிகளுடன் இணைந்து கோயிலின் தற்போதுள்ள தோற்றத்தை 2003-ஆம் குடமுழுக்குக்குமுன் வடிவமைத்தார். அக்குடமுழுக்குச் செலவுகளுக்குப் புத்த, கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயத்தினர் கணிசமாக நன்கொடை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தேசிய மரபுடைமைக் கழகம் 2003-இல் கோயிலை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுள் ஒன்றாக அங்கீகரித்தது.
தொடர்ந்து விரிவடையும் ஆலயச் சேவைகளுள் பாலர் பள்ளியும் சிறு அரும்பொருளகமும் சேர்ந்துள்ளன. சிங்கப்பூர்க் கோயில்களில் முதன்முறையாக, சுமார் 1500 பேருக்கு அரைமணி நேரத்தில் உணவு தயாரிக்கும் திறன்வாய்ந்த தானியங்கிச் சமையலறை 4 மில்லியன் வெள்ளி செலவில் கோயிலில் நிறுவப்பட்டுள்ளது. ஆலயத்தின் அண்மைய குடமுழுக்கு 2015-இல் நடந்தபோது பல இனங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் கலந்துகொண்டனர். அவ்விழாவிற்கு வருகை தந்த அன்றைய சட்ட, வெளியுறவு அமைச்சர் கா.சண்முகம், சிங்கப்பூரின் பண்பாட்டு, இன நல்லிணக்கத்துக்கு ஆலயம் ஓர் எடுத்துக்காட்டு என்றார்.
மேல்விவரங்களுக்கு
National Library Board. “Sri Senpaga Vinayagar Temple.” Singapore Infopedia. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=951a1915-dbea-403e-9e1a-0e64f014fce7.
“Sri Senpaga Vinayagar Temple.” Roots.sg. Accessed on 1 August 2025. https://www.roots.gov.sg/places/places-landing/Places/surveyed-sites/sri-senpaga-vinayagar-temple.
Rekhi, Shefali. “Sri Senpaga Vinayagar Temple consecration ceremony: 5 things about the historic temple in Ceylon Road.” The Straits Times, 21 January 2015.
Sim, Walter. “Thousands Attend Consecration Ceremony at Historic Ceylon Road Temple.” The Straits Times, 26 January 2015.
“கோயில் வரலாறு.” ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம். Accessed on 1 August 2025. https://ssvt.org.sg/ta/about/index/temple-history.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |