எஸ். ராஜரத்தினம் என அறியப்படும் சின்னத்தம்பி ராஜரத்தினம் (1915-2006) சுதந்திரச் சிங்கப்பூரின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட முதல் தலைமுறைத் தலைவர்களுள் ஒருவர். மக்கள் செயல் கட்சியின் நிறுவனர்களுள் ஒருவர். அரசாங்கத்தில் மூத்த அமைச்சர், துணைப்பிரதமர், வெளியுறவு, கலாசார, தொழிலாளர்துறை எனப் பல துறைகளுக்கு அமைச்சராகவும் இருந்தவர். பெயர்பெற்ற பத்திரிகையாளர். சிங்கப்பூர்த் தேசிய உறுதிமொழியை வடிக்க உதவியவர்.
இலங்கையில் பிறந்த ராஜரத்தினம், ஆறுமாதக் கைக்குழந்தையாக இருந்தபோதே மலாயாவுக்கு அழைத்துவரப்பட்டார். சிரம்பானின் செயிண்ட் பால் பள்ளி, சிங்கப்பூரின் ராஃபிள்ஸ் பள்ளி கோலாலம்பூரின் விக்டோரியா பள்ளி ஆகியவற்றில் பயின்று, 1934-இல் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் 1936-இல் சட்டக் கல்விக்காக லண்டனின் கிங்ஸ் கல்லூரிக்குச் சென்றார். அங்கு படித்த காலத்தில் இடதுசாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். அரசியல் விழிப்புணர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் (1942-45), மலாயாவிலிருந்து நிதிவரத்து தடைப்பட்டபோது, சட்டக் கல்வியைக் கைவிட்டு, தம் தேவைகளைச் சமாளிப்பதற்காக லண்டனில் பத்திரிகையாளரானார்.
போர் முடியும்வரை லண்டனிலேயே வாழ்ந்த ராஜரத்தினம், 1947-இல் சிங்கப்பூருக்கு வந்தார். அடுத்த பத்தாண்டுகளுக்கு மலாயா டிரிபியூன் (1948-50), சிங்கப்பூர் ஸ்டாண்டர்ட் (1950-1954), தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (1954-59) ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றி அரசியல் கட்டுரைகளும் தலையங்கங்களும் எழுதினார். மக்கள் செயல் கட்சி 1954-இல் தொடங்கப்பட்டபோது, அதன் நிறுவனர்களுள் ஒருவராக அரசியலில் நுழைந்தார். அக்கட்சியின் வேட்பாளராகக் கம்போங் கிளாம் தொகுதியில் 1959-இல் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மக்கள் செயல் கட்சி ஆட்சியமைத்தபோது கலாசார அமைச்சராகப் (1959-65) பொறுப்பேற்றார். சிங்கப்பூர் 1965-இல் சுதந்திரம் பெற்றுத் தனிநாடாக ஆனபோது குடியரசின் முதல் வெளியுறவு அமைச்சராகி 1980 வரை அப்பதவியை வகித்தார். அக்காலகட்டத்தில் சுமார் மூன்றாண்டுகள் (1968-71) தொழிலாளர் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் இரண்டாம் துணைப்பிரதமராகவும், மூத்த அமைச்சராகவும் பணியாற்றி 1988-இல் பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற்றார். அதன்பின் தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்தில் (தற்போது தென்கிழக்காசிய-யூசோப் இஷாக் ஆய்வுக் கழகம்) மதிப்புறு மூத்த ஆய்வாளராகப் பணியாற்றினார்.
சிங்கப்பூரில் பத்திரிகையாளராகப் பணியாற்றியபோது, அன்றைய மலாயாவின் ஆளுநரைச் சந்தித்து விளக்கமளிக்க அழைக்கப்படும் அளவுக்குக் காலனித்துவ ஆட்சியின் குறைகளைத் தீவிரமாக வெளிப்படுத்தும் கட்டுரைகளை ராஜரத்தினம் எழுதினார். அவர் கட்டுரைகள் மட்டுமின்றிச் சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவை ஒரு தொகுப்பாக 2011-இல் (The Short Stories and Radio Plays of S. Rajaratnam) வெளிவந்தன. பண்பாட்டுப் பன்மைத்துவத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த அவர், கலாசார அமைச்சராக, தேசிய உறுதிமொழிக்கான இறுதி வரைவுகளை 1966-இல் மாற்றியமைத்தபோது அதில் பல்லினங்கள் ஒன்றுபட்டு சிங்கப்பூர் முன்னேறவேண்டிய கனவைப் பதித்தார். வெளியுறவு அமைச்சராகத் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் (1967) செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியதற்காக 1997-இல் ஆசியானால் கௌரவிக்கப்பட்டார்.
ராஜரத்தினம் தன் அரிய சேவைகளுக்காகச் சிங்கப்பூரின் ஆக உயர்ந்த பொதுச்சேவை விருதான தெமாசெக் விருதை (முதல் படித்தரம்) 1990-இல் பெற்றார். அவர் 2006-இல் உடல்நலக்குறைவால் காலமானபோது, அரசு மரியாதையுடன் நடந்த இறுதிச் சடங்கில், அவர் வரைய உதவிய தேசிய உறுதிமொழியை அனைவரும் ஒப்பித்தனர். அவரது நினைவாக ராஃபிள்ஸ் பள்ளியில் ஒரு கட்டடத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அவர் பெயரில் எஸ். ராஜரத்தினம் பன்னாட்டுறவியல் பள்ளி 2007-இல் நிறுவப்பட்டது. வட்டார அளவிலும் அனைத்துலக அளவிலும் சிங்கப்பூரின் தொடர்புகளை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு உதவுவதற்காக தெமாசெக் ஹோல்டிங்ஸ் 2014-இல் நிறுவிய 100 மில்லியன் வெள்ளி அறநிதிக்கும் ராஜரத்தினத்தின் பெயர் இடப்பட்டது. சிங்கப்பூர்ச் சிற்பிகளுள் ஒருவராகவும் தெளிவுடனும் தொலைநோக்குடனும் சித்தாந்தங்களை வகுத்துத் தந்தவராகவும் ராஜரத்தினம் நினைவுகூரப்படுகிறார்.
மேல்விவரங்களுக்கு
Singapore: The Encyclopedia, edited by Tommy Koh, Timothy Auger, Jimmy Yap, Ng Wei Chian, published by Editions Didier Millet and National Heritage Board, 2006
சிங்கப்பூர்த் தமிழர்கள்: இருநூறு, எ.வீரமணி, மாலதி பாலா, மு. பாலதண்டாயுதம் ஆகியோரால் தொகுக்கப்பட்டது. சிங்கப்பூர் தமிழ் இளைஞர் சங்கம், 2019.
To read in English
Return to home page
About the Encyclopedia
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |