சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயில், சுமார் 200 ஆண்டு பழமைவாய்ந்த இந்துக் கோவில். நாராயண பிள்ளை என்பாராலும், வேறு சில சமூகத் தலைவர்களாலும் 1827இல் நிறுவப்பட்ட இக்கோவில், 1973இல் தேசிய நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. அத்தகைய அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்து மதத் தலம் என்ற பெருமையும் பெற்றது.
லெப்டினன்ட் பிலிப் ஜாக்சனால் 1823-இல் வரையப்பட்ட சிங்கப்பூரின் முதல் நகர நிர்மாணத் திட்டத்தில் ஆலயம் அமைந்திருக்கும் தற்போதைய இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் 1827 வாக்கில் மரமும் அத்தாப்பும் (ஒருவகை பனை) சேர்ந்து கட்டப்பட்ட கூடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இக்கோவில், “கிளிங் கோவில்” என்றும் குறிப்பிடப்பட்டது. கிளிங் என்பது தென்னிந்தியர்களைக் குறிக்க வழங்கப்பட்ட பொதுச்சொல். அச்சொல் இழிவானதாகக் கருதப்பட்ட காலத்திற்குமுன்பு அப்பெயர் வழக்கிலிருந்தது. கோவில் வளாகத்தை விரிவுபடுத்த, இந்திய நில உரிமையாளர் சேஷாசலம் பிள்ளை, 1831-இல் தமது நிலத்தை நன்கொடையாக வழங்கினார். இது கோவிலிலுள்ள ஒரு கருங்கல் பலகையில் நினைவுகூரப்பட்டிருக்கிறது.
கோவிலின் செங்கல் கட்டமைப்பின் பழமையான பகுதிகள் 1843-இல் கட்டப்பட்டவை. பின்னர், 1915-இல் ஸ்வான் & மெக்லாரன் நிறுவனம், ராஜகோபுரத்திற்கும் பிரதான சன்னதிக்குமிடையே புதிய நடைபாதையை வடிவமைத்தது. தொடர்ந்து 1925-இல், பழைய மூன்றடுக்கு ராஜகோபுரத்திற்குப் பதிலாக இன்று காணப்படும் ஐந்தடுக்கு கோபுரம் அமைக்கப்பட்டது. கடந்த நூற்றாண்டில், கோவில் பல கட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டது. ஆயினும் கோவில் நிறுவப்பட்டபோது பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிய மாரியம்மன் சிலை இன்றளவும் கருவறையில் இருந்துவருகிறது.
வழிபாட்டுத் தலமாக விளங்கியதோடு, தொடக்ககாலத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயில், புதிதாகக் குடியேறியவர்களுக்கு அடைக்கலமாகவும் அவர்களுள் ஏற்படும் சர்ச்சைகளைத் தீர்க்கும் இடமாகவும் இந்துத் திருமணங்களின் பதிவகமாகவும் செயல்பட்டது. நாளடைவில், ஆலயத்தின் கட்டுமானங்கள் விரிவடைய விரிவடைய, அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் சமயச் சடங்குகளுக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தன. பாரம்பரிய முக்கியத்துவம் மிக்க இக்கோவில் ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. கோவிலின் முதன்மையான விழாவான தீமிதி ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்து அறநிலைய வாரியத்தால் நிர்வகிக்கப்படும் இக்கோவில், ஒரு பண்பாட்டு மையமாகவும் விளங்குகின்றது.
கோவில்களை 12 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்துக் குடமுழுக்கு விழாவை நடத்தும் இந்து பாரம்பரியத்தை ஒட்டி, ஆறாம் குடமுழுக்கு விழா 2023-இல் நடைபெற்றது. அனைவரையும் உள்ளடக்கும் விதமாக விளங்கிய அவ்விழாவில் பல்லின பக்தர்கள் சுமார் 20,000 பேர் கலந்துகொண்டனர்.
மேல்விவரங்களுக்கு
RootsSG. (n.d.). Sri Mariamman Temple. Accessed on August 1, 2025. https://www.roots.gov.sg/places/places-landing/Places/national-monuments/sri-mariamman-temple
Sri Mariamman Temple. (n.d.). About Temple. Accessed on August 1, 2025. https://smt.org.sg/HEB/Template3/history
Tan, Bonny, and Valerie Chew. Sri Mariamman Temple. Singapore Infopedia. Accessed on August 1, 2025.
Vardini, Vishnu A. (February 12, 2023). 20,000 people mark restoration and consecration of Singapore’s oldest Hindu temple. The Straits Times. Accessed on August 1 2025. https://www.straitstimes.com/singapore/20000-people-mark-restoration-and-consecration-of-singapore-s-oldest-hindu-temple
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |