முற்போக்குத் தமிழ் வார இதழான முன்னேற்றம், மலாயாத் தமிழர்களின் சீர்திருத்தத்திற்கு உதவும் நோக்கத்துடன் ஜனவரி 1929-இல் தொடங்கப்பட்டது.
வி.எஸ். நாராயணசாமியை ஆசிரியராகவும் கோ. சாரங்கபாணியைத் துணை ஆசிரியராகவும் கொண்டு தொடங்கப்பட்ட இதழில், தலையங்கம், கவிதை, கதிரொளி, கடிதங்கள், உலக நிகழ்ச்சிகள், துணுக்குச் செய்திகள் முதலிய தலைப்புகளில் படைப்புகள் இடம்பெற்றன. இதழ், 152 சிலிகி ரோடு, முன்னேற்றம் காரியாலயம் என்ற முகவரியிலிருந்து 20 பக்க அளவில் வெளியானது. விலை ஐந்து காசு.
தமிழர் சீர்திருத்தச் சங்கம் 1930-களின் முற்பகுதியில் நிறுவப்பட்டது குறித்து இதழில் விரிவாகச் செய்தி வெளியிடப்பட்டது. சமுதாய மாற்றங்களை முன்வைக்கும் ‘சுயமரியாதை இயக்கம் சாதித்ததென்ன?’, ‘தமிழர் மாநாடு எங்கே?’ முதலிய தலையங்கங்களும் சீர்திருத்தச் சிந்தனைகளை வலியுறுத்தும் ‘திருத்தப்பட்ட மனமே திருமணம்’, ‘பெண்கள் முன்னேற்றம்’ போன்ற கட்டுரைகளும் இடம்பெற்றன.
பிப்ரவரி 1930-இல், ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் சிங்கப்பூர் வருகையை நினைவுகூரும் வகையில், முன்னேற்றம் ஒரு நினைவு மலரை வெளியிட்டது. அவ்வாண்டின் இறுதியில் முன்னேற்றத்தில் சாரங்கபாணி எழுதிய கட்டுரை ஒன்றில், பெரியாரால் 1929 டிசம்பரில் தொடங்கி வைக்கப்பட்ட முதல் அகில மலாயாத் தமிழர் மாநாட்டின் சீர்திருத்தத் தீர்மானங்கள் போதிய அளவுக்கு நிறைவேறாததுதான் இரண்டாவது அகில மலாயாத் தமிழர் மாநாடு தாமதமாவதற்குக் காரணமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அ.சி. சுப்பய்யா எழுதித் தொடராக 1933-இல் முன்னேற்றத்தில் வெளிவந்த ‘தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி’ கட்டுரை, அதே பெயரில் 1935-இல் பெரியார் ஆதரவுடன் நூலாக்கம் செய்யப்பட்டது.
வி.ஜே. சந்திரராஜ், அம்பை சி.ஆர். சுந்தரம் ஆகியோர் 1930-களின் முற்பகுதியில் இதழின் ஆசிரியர்களாகப் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. சாரங்கபாணி 1935-க்குப் பிறகு தமிழ் முரசின் ஆசிரியராக ஆகிவிட்டதால் முன்னேற்றத்திலும் பணியாற்றியிருக்க வாய்ப்புகள் குறைவு. முன்னேற்றம், வாரத்திற்கு மூன்றுமுறை வெளியாகும் இதழாக மாறிப் பிறகு மாத இதழாக மாறியது. ஆயினும் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் வெளிவரவில்லை. மேலும், அளவிலும் வடிவமைப்பிலும் இறுதிவரைத் தொடர்ந்து மாற்றங்களைச் செய்தது. முன்னேற்றத்தின் ஒன்பதாம் ஆண்டு மலர் 1937-இல் வெளியிடப்பட்டது, குறைந்தபட்சம் அதுவரை இதழ் வெளிவந்திருக்கக்கூடும். முன்னேற்றம் நின்றுபோன ஆண்டும் அதற்கான காரணங்களும் தெரியவில்லை.
மேல்விவரங்களுக்கு
Baskaran, Bala. Tamil Journalism in Singapore and Malaya (1875-1941) Filling Up the Gap. Unpublished Manuscript.
திருமுருகானந்தம், கோட்டி. சிங்கப்பூர் இதழியல் வரலாறு. சென்னை: பாஸ் ஃபவுண்டேஷன், 2019.
ஏ.ஆர்ஏ. சிவகுமாரன். சிங்கப்பூர்த் தமிழ்க் குழந்தை இலக்கியம் - திறனாய்வு. சிங்கப்பூர்: தமிழ்க்கலை அச்சகம், 2006.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |