எஸ்.ஆர். நாதன் என அறியப்படும் செல்லப்பன் ராமனாதன் (1924-2016) சிங்கப்பூரின் ஆறாவது அதிபர். ஆகநீண்ட காலம் (12 ஆண்டுகள்) அப்பதவியை வகித்தவர். தற்காப்பு, உள்துறை, வெளியுறவு போன்ற பல்வேறு அமைச்சுகளின் உயர் பதவிகளிலும் தூதராகவும் பணியாற்றியவர். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) நிறுவன உறுப்பினராகவும் இந்து அறக்கட்டளை வாரியத் தலைவராகவும் இந்தியச் சமூகத்துக்குச் சேவையாற்றியவர். சிங்கப்பூரில் பிறந்த நாதன் ஆங்கிலோ-சைனீஸ் தொடக்கப்பள்ளி, ரங்கூன் ரோடு பள்ளி ஆகியவற்றில் தொடக்கக் கல்வியும் விக்டோரியா பள்ளியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். பதினாறு வயதில் சக மாணவரின் புத்தகங்களைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். அச்சம்பவத்திற்குப் பிறகு நாதன் வீட்டுக்குச் செல்ல விரும்பவில்லை. சமூகத்தில் மதிப்புமிக்க ஒருவராக மாறிய பிறகே இல்லம் திரும்புவது என முடிவெடுத்து வேலை தேடத் தொடங்கினார். மலேசியாவின் மூவார் என்னும் ஊரில் எழுத்தராக வேலை கிடைத்தது. அங்கு நான்காண்டுகள் வேலை செய்துவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பினார். அது ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலமாதலால் (1942-45) ஜப்பானிய மொழியைக் கற்று ஜப்பானியக் காவல்துறையில் மொழிபெயர்ப்பாளரானார்.
போருக்குப்பிறகு பொதுப்பணித் துறையில் எழுத்தராகப் பணியாற்றினார். கல்வியைத் தொடர்வதற்காக அவ்வேலையை விட்டு, மலாயாப் பல்கலைக்கழகத்தில், சமுதாயவியல் துறையில் பட்டயப் படிப்பைச் சிறப்புநிலைத் தேர்ச்சியுடன் 1954-இல் முடித்தார். பட்டயப் படிப்பிற்கான அவரது ஆய்வு கடல்துறை சார்ந்ததாக இருந்ததால் கடலோடிகள் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அக்காலக்கட்டத்தில், சிங்கப்பூரில் ஊழியர் வேலைநிறுத்தம், போராட்டங்கள் போன்ற பிரச்சினைகள் அதிக அளவில் இருந்ததால், அவற்றைத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்த தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தொழிலாளர் ஆய்வுப்பிரிவின் துணை இயக்குநராக 1962-இல் பதவியேற்று இயக்குநராகவும் உயர்ந்தார்.
பின்னர், 1966-இல், வெளியுறவு அமைச்சுக்கு மாற்றப்பட்ட நாதன் 1971 வரை உதவி, துணைச் செயலாளர் பதவிகளை வகித்தார். அதன்பின் தற்காப்பு அமைச்சின் பாதுகாப்பு, உளவுப் பிரிவு இயக்குநராக எட்டாண்டுகள் (1971-79) பணியாற்றியபின் மீண்டும் வெளியுறவு அமைச்சில் நிரந்தரச் செயலாளராக 1982 வரை பணியாற்றினார். அதன்பின் ஊடக நிறுவனமான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் தலைவராகப் (1982-88) பொறுப்பேற்றார். பின்னர், 1988-இலிருந்து 1999 வரை மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான தூதராகவும் பொதுத்தூதராகவும் பணியாற்றினார். அதே காலக்கட்டத்தில், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், இப்போது எஸ். ராஜரத்தினம் பன்னாட்டுறவியல் பள்ளி என அறியப்படும் தற்காப்பு, உத்திமுறை ஆய்வுக் கழகத்தை நிறுவி அதன் இயக்குநராகவும் செயல்பட்டார். நாதன், தம் பல்தரப்பட்ட பணிகளுக்கிடையே சமூக சேவையிலும் ஈடுபட்டிருந்தார். சிண்டாவின் நிறுவன உறுப்பினராகவும் அறங்காவலராகவும் (1991-99) சேவைபுரிந்து இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்குப் பெரும் தொண்டாற்றினார்.
பின்னர், எல்லாவற்றுக்கும் சிகரமாக, இரண்டுமுறை நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 12 ஆண்டுகள் (1999-2011) பணியாற்றி ஓய்வுபெற்றார். அதிபர் பதவியேற்ற முதல் தமிழர் நாதன். அதிபராக இருந்தபோது, தயங்காமல் தமிழிலேயே பேசித் தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்தார். தமிழ் அமைப்புகளின்பால் தனித்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதன்பிறகு தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் மதிப்புறு மூத்த ஆய்வாளராகப் பணியாற்றினார். தன் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் இரு நூல்களாக (An Unexpected Journey: Path to the Presidency, 2011 and S R Nathan: 50 Stories from My Life, 2013) வெளியிட்டார். தமிழில் முறையே உழைப்பால் உயர்ந்தவர், என் வாழ்விலிருந்து 50 கதைகள் என்னும் தலைப்புகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாதன் உடல்நலக்குறைவால் 92-ஆம் வயதில், 2016-இல் மறைந்தார்.
தம் பொதுப்பணிகளுக்காகப் பொதுச்சேவை நட்சத்திர விருது (1964), மதிப்பிற்குரிய சேவை விருது (1974), வாழ்நாள் சாதனையாளர் விருது (2015) உட்பட பல விருதுகளைப் பெற்ற நாதன் சிங்கப்பூரின் பொதுச்சேவை விருதுகளில் ஆக உயர்ந்ததான முதல்நிலை தெமாசெக் விருதையும் (2013) பெற்றவர். அவரைக் கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் சமுதாய சேவைக்கான எஸ்.ஆர். நாதன் பேராசிரிய இருக்கை ஒன்றை 2012-இல் நிறுவியது. கொள்கை ஆய்வுக்கழகம் சிங்கப்பூர் குறித்த ஆய்வுகளுக்காக எஸ்.ஆர். நாதன் ஆய்வு உதவித்தொகை அளிப்பதை 2013-இல் தொடங்கியது.
பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவர் என்ற நிலையிலிருந்து நாட்டின் முதல் குடிமகன் என்ற நிலைக்கு உழைப்பால் உயர்ந்த நாதன், “கடினமாக உழைத்து முன்னேறுவதைப் பரிந்துரைக்கும் அதேவேளையில் சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிவிடப் பரிந்துரைக்க மாட்டேன்” என்று நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார். அரசாங்கம், பல்கலைக்கழகம், தொழிற்சங்கம், ஊடகம், சமூகத் தொண்டு எனப் பல தளங்களில் முத்திரை பதித்த நாதன், அதிபராக இருந்தபோதுகூட, சாமானியர்களோடு அன்பாகவும் அணுக்கமாகவும் பேசிப் பரவலாக மக்கள் மனதில் இடம் பிடித்ததால், “மக்கள் அதிபர்” என நினைவுகூரப்படுகிறார்.
மேல்விவரங்களுக்கு
Koh, Tommy, Timothy Auger, Jimmy Yap, and Wei Chian Ng, eds. Singapore: The Encyclopedia. Editions Didier Millet and National Heritage Board, 2006. (Call no. 959.57003 SIN - [HIS])
Chua, Alvin. “S. R. Nathan.” Singapore Infopedia. Published 4 December 2023. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=4c462235-1a9b-46a5-b000-cdcfd59ec6c6
தமிழ் முரசு. "முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதன் மரணம்." 5 December 2022. https://www.tamilmurasu.com.sg/top-news/story20160823-4509
அ.வீரமணி, மாலதி பாலா, மா. பாலதண்டாயுதம். சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர், சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் வெளியீடு. (Call no. 305.89481105957 SIN)
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |