இந்திராணி ராஜா



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

இந்திராணி ராஜா (பி. 1963) மக்கள் செயல் கட்சி (ம.செ.க.) அரசாங்கத்தில் அமைச்சராகவும்   நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராகவும் உள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் முதல் பெண் தலைவரும் அவரே.

சிங்கப்பூரில் பிறந்த அவர், மேரிமவுண்ட் கான்வென்ட் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளிலும், அதைத் தொடர்ந்து ராஃபிள்ஸ் பள்ளியிலும் பயின்றார். அவர் 1986இல் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளநிலைப் பட்டம் (சிறப்புத் தகுதி) பெற்றார். மறு ஆண்டு, சிங்கப்பூர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக அங்கீகாரம் பெற்றார். ஃப்ரெஷ்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் அவரது சட்டப்பணி தொடங்கியது. பின்னர் அவர் 1988-இல் ட்ரூ & நேப்பியர் சட்டநிறுவனத்தின் வழக்காடல் பிரிவில் சேர்ந்து, 2003-இல் மூத்த வழக்கறிஞராக நியமனம் பெற்றார். ட்ரூ & நேப்பியர் சச்சரவுத் தீர்வுப் பிரிவின் துணைத்தலைவராக பணியாற்றியபோது, அவரது சட்டப்பணி எல்லை தாண்டிய வர்த்தகத் தகராறுகள், அனைத்துலக நடுவர் மன்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. பிறகு 2012-இல், அவர் அரசாங்கத்தில் சேர்ந்தார். ம.செ.க. உறுப்பினரான இந்திராணி ராஜா, 2001 முதல் 2025 வரை நாடாளுமன்ற உறுப்பினராக தஞ்சோங் பகார் குழுத்தொகுதியைப் பிரதிநிதித்தார். பின்னர், 2025 முதல், அவர் பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியைப் பிரதிநிதித்து வருகிறார். அவர், 2012-இல், சட்டம், கல்விக்கான மூத்த துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் 2025 முதல் பிரதமர் அலுவலக அமைச்சராகவும், இரண்டாம் நிதி அமைச்சராகவும், இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.

அவரது சட்டப் பொறுப்பின்கீழ், குடும்ப நீதி, சிங்கப்பூர் அனைத்துலக வணிக நீதிமன்றத்தை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான முக்கிய குழுக்களுக்கு இணைத் தலைவராக இருந்தார். அவர் சிங்கப்பூரை மறுசீரமைப்பு நடுவமாக வலுப்படுத்துவதற்குரிய குழுவின் இணைத் தலைவராகவும் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள சிங்கப்பூரின் மூன்றாவது சட்டப் பள்ளியின் உத்திபூர்வ இலக்கு பற்றிய வழிகாட்டுக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவரது கல்விப்பொறுப்பில், பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்திற்கும் உரிய செயல்முறைக் கல்விக்கான குழுவை அவர் வழிநடத்தினார். அக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் விளைவாக ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ என்னும் தேசிய இயக்கம் உருவானது. நாட்டின் பொருளியல் தேவை, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டல், வாழ்நாள் கற்றல் ஆகியவற்றுடன் கல்வித்துறையை ஒருங்கிணைப்பது அதன் நோக்கம். அவர் 2018-இல், பிரதமர் அலுவலகத்தில் அமைச்சராகவும் நிதி, கல்வித்துறைகளின் இரண்டாவது அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஈராண்டுகள் கழித்து,  கல்வித்துறைக்குப் பதிலாகத் தேசிய வளர்ச்சி அமைச்சின் இரண்டாவது அமைச்சராகவும் நாடாளுமன்றத்தில் அவைத்தலைவராகவும் பதவியேற்றர். அமைச்சரவைப் பொறுப்புகளுடன் இந்திராணி ராஜா சிண்டாவின் தலைவராகவும் தவணை அறங்காவலராகவும் பணியாற்றுகிறார்.




மேல்விவரங்களுக்கு
“Indranee Rajah.” Parliament of Singapore. Accessed 1 August 2025. https://www.parliament.gov.sg/mps/list-of-current-mps/mp/details/indranee-rajah 
“Indranee Thurai Rajah.” Parliament of Singapore, January 2016. https://www.parliament.gov.sg/docs/default-source/CV/parliament-cv_ms-indranee-rajah-(jan-2016).pdf 
“Indranee Thurai Rajah.” Parliament of Singapore, August 2020. https://www.parliament.gov.sg/docs/default-source/cv/cv---minister-indranee-rajah-(25-aug-2020).pdf?sfvrsn=23984c08_1 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.



Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA