நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பு, விழுமியங்களைப் போற்றும் சமூகத்தைக் கட்டமைத்தல், இளையரின் திறமைகளை வளர்த்தல், தமிழ்ச் சமூகத்திற்குச் சேவை செய்தல் ஆகிய நோக்கங்களுடன் உருவானது. மன்றம், ‘வாங்க பழகலாம்’ என்னும் நிகழ்ச்சியைப் புதிதாகச் சேரும் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும், பொங்கல், தீபாவளி போன்ற பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், 2015-ஆம் ஆண்டில், மன்றமும் தங்லின் சமூக மன்றமும் இணைந்து பொங்கல் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தன. இதில் சுமார் 198 பேர் சமூக மன்றத்தில் பொங்கல் வைத்தனர். பதினைந்து நிமிடங்களுக்குள் பொங்கிய பானைகளின் எண்ணிக்கை, சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
தமிழ் மொழி, இலக்கியத்தை மேம்படுத்துவதற்காகச் சில முக்கிய நிகழ்வுகளை மன்றம் தொடர்ந்து நடத்தி வருகிறது. ‘பார்வை’ என்னும் இலக்கிய நிகழ்வு 2011 முதல் ஆண்டுதோறும் நடக்கிறது. குறும்படங்கள், விவாதங்கள், ஒலி, ஒளி வெளியீடுகள், சித்திரக் கதைகள் எனப் பலவாறாக இளைஞர்கள் இலக்கியத்தின்மீதான தங்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு ‘உத்ரா’. இது 2012-இல் தொடங்கப்பட்டு ஈராண்டுக்கு ஒரு முறை தமிழையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி. தொடக்கத்தில் சுமார் 50 மாணவர்களை மட்டுமே ஈர்த்த நிகழ்ச்சி, 2016-இல் 1500 பார்வையாளர்களைப் பெற்றது. பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மாணவர்களின் திறமையை மேலும் வளர்ப்பதற்காகப் பல்வேறு ஆர்வலர் குழுக்கள் பின்னர் தொடங்கப்பட்டன. அவற்றுள் இசை, நடனம், நாடகம், தொழில்நுட்பம், எழுத்து எனப் பல பிரிவுகள் அடங்கும். உத்ராவின் வெற்றியைத் தொடர்ந்து, 2017-இல் ‘மோகா’ என்ற கலாசார இரவு நிகழ்வை இப்பிரிவுகள் திட்டமிட்டுச் செயல்படுத்தின. அந்த நிகழ்ச்சிக்கு மோதல், காதல் ஆகிய கருப்பொருள்களுக்கு ஏற்ப மோகா என்று பெயரிடப்பட்டது. உத்ரா, மோகா ஆகிய இரண்டும் நடிப்பு, திரைக்கதை எழுதுதல், இயக்கம், பாடல், நடனம், தகவல் தொழில்நுட்பம், ஒளியமைப்பு ஆகிய துறைகளில் மாணவர்கள் தங்கள் ஆர்வத்தையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளும் களமாகச் செயல்பட்டன.
மன்றத்தின் செயல்பாடுகளைப்பற்றிய செய்திகளைத் தாங்கி ஆண்டுக்கு ஒரு முறை வெளியாகும் இதழின் ஓரம் சஞ்சிகை, 2011-இல் தொடங்கப்பட்டு, எழுத்தார்வம் உள்ள பலருக்கும் வாய்ப்பளிக்கிறது. இன்னுமொரு குறிப்பிடத்தக்க முயற்சி, ‘அறம்’ திட்டம். வெளிநாட்டில் சமூகத் தொண்டு செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. அத்திட்டம், 2019-இல் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியில் தொடங்கியது. அங்குள்ள ஓர் அறநிறுவனத்துடன் சேர்ந்து மனநலமும் உடல்நலமும் குன்றிய பிள்ளைகளுக்கான வகுப்பறையைப் புதுப்பித்தனர். அந்தத் திட்டத்தில் அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட 20 மாணவர்கள் பங்கேற்றனர். வெளிநாட்டில் சிறந்த சமூகச் சேவைக்காக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ‘CoLab4Good’ விருதை 2019-இல் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் பெற்றது.
மேல்விவரங்களுக்கு
Nanyang Technological University Tamil Literary School. Accessed 1 August 2025. https://www.ntutls.com/
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |