பொங்கல்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

தமிழர்களின் அறுவடைத் திருவிழா என்றும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருநாள் என்றும் கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை. பொங்கல் கொண்டாட்டம் செழிப்பான அறுவடைக்கு அடிப்படைக் காரணிகளான சூரியன், இயற்கை, பண்ணை விலங்குகள் ஆகியவற்றின் முக்கியப் பங்களிப்பைக் கௌரவிக்கிறது. தை மாதத்தின் முதல் நாளன்று, அதாவது ஜனவரி 14 அல்லது 15-ஆம் தேதியில் புதுப்பிப்பையும் நன்றியுணர்வையும் குறிக்கும்வகையில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூர் ஒரு விவசாய நாடு அன்று. எனினும், தமிழ்ச் சமூகத்தினர் பொங்கலை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். அண்மைய ஆண்டுகளில், சிராங்கூன் ரோடு நெடுகிலும் அமைக்கப்படும் பொங்கல் ஒளியூட்டுக் காட்சி அவ்விழாவிற்கு மேலும் மெருகூட்டியுள்ளது. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், இந்திய மரபுடைமை நிலையம் முதலிய அமைப்புகள் பல்வேறு நிகழ்வுகள்மூலம் அவ்விழாவை உயிரோட்டத்துடன் வைத்துள்ளன. திறந்தவெளி நடவடிக்கைகள், பொங்கல் சந்தை, பாரம்பரியச் சமையல் நிகழ்ச்சிகள், பசுக்களைக் கொண்ட ஒரு சிறுபண்ணை முதலியவை கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன.

நான்கு நாள் பொங்கல் விழா வளமையும் அர்த்தமும் உள்ள பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பொங்கல் என்னும் பெயரில் பொங்கல் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. புதுப்பிப்பின் அடையாளமாக, வீட்டைத் தூய்மையாக்கிப் பழைய பொருள்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. அத்துடன், மழைக்கும் இடிக்கும் உரிய கடவுளாகக் கருதப்படும் இந்திரனுக்கு, விவசாயம் செழிக்க ஆசிகள் வேண்டி அன்று வழிபாடு செய்யப்படுகிறது.

அடுத்த நாளாகிய தை மாதத்தின் முதல் நாள், தைப்பொங்கல். கோலங்களும் அலங்கரிக்கப்பட்ட வீடுகளும் கோயில் நுழைவாயில்களும் ஒரு பண்டிகைச் சூழலை உருவாக்குகின்றன. அன்று சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் புத்தரிசி, பால், ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நல்ல நேரம் பார்த்துப் பொங்கலைத் தயாரிக்கின்றனர். பானை பொங்கி வழியும் தருணத்தில் களிப்பு, செழிப்பு, நற்பேறு ஆகியவற்றைக் குறிக்கும் விதமாக "பொங்கலோ பொங்கல்" என மகிழ்ச்சி முழக்கம் செய்கின்றனர். பிறகு அப்பொங்கலைக் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் உறவின் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாகப் பகிர்ந்து உண்கின்றனர்.

மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், விவசாய வாழ்க்கையில் இன்றியமையாத பங்காளிகளான கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துகிறது. மாடுகளின் கொம்புகள் பூக்களாலும் மணிகளாலும் வண்ணப்பூச்சுடன் அலங்கரிக்கப்படுகின்றன. மேலும், அவற்றுக்கு சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலியவையும் உணவாகக் கொடுக்கப்படுகின்றன.

பொங்கல் திருநாளின் நான்காவதும் இறுதியுமான நாளில்  சமூகத்தினரையும் உறவுகளையும் ‘சென்று காணுதல்’ என்னும் பொருளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தினரும் நண்பர்களும் ஒருவரையொருவர் கண்டு, பண்டிகை உணர்வையும் உணவையும் பகிர்ந்துகொள்கின்றனர். குடும்பத்தின் இளையோர் மூத்தோரிடம் ஆசி பெறுகின்றனர்.

முதலில் விவசாயிகளின் பண்டிகையாக இருந்த பொங்கல், வர்க்க, சமய எல்லைகளைக் கடந்து, அனைத்துத் தமிழர்களுக்கும் உரிய ஒரு கொண்டாட்டமாகப் பரிணமித்துள்ளது. தமிழ்நாட்டில் அந்த விழா நான்கு நாள்கள் நீடித்தாலும் சிங்கப்பூரில் பொதுவாகப் பொங்கல் கொண்டாட்டங்கள் சுருக்கமாக ஒரே நாளில் நிறைவுறுகின்றன.

பொங்கலின் பண்பாட்டு முக்கியத்துவம் சமூகக் கொண்டாட்டங்களுக்கும் மேலானது. அது குறித்தச் செய்திகள் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்குரிய தமிழ்ப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. அத்துடன், பல கல்வி நிறுவனங்கள், பல்வேறு இனப் பின்னணியைக் கொண்ட மாணவர்கள் அதனைப் புரிந்துகொள்ளும் வகையில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன. சிங்கப்பூர் இந்தியச் சமூக அமைப்புகள் பொங்கல் விழாவை நடத்துகின்றன. அந்தக் கொண்டாட்டங்களில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்கின்றனர். அனைவரையும் உள்ளடக்கிய அந்த அணுகுமுறை தமிழ் மரபு, பண்பாடு சார்ந்த விழிப்புணர்வையும் அவற்றை மதித்துப் போற்றுவதையும் கணிசமாக உயர்த்தியுள்ளது. மேலும், பொங்கல் திருவிழாவின் முக்கியத்துவம் பிரதமரின் வழக்கமான பொங்கல் வாழ்த்துகளால் மேலும் வலுப்படுகிறது. தமிழ் ஊடகங்கள் பொங்கல் தொடர்பான செய்திகளை விரிவாக வெளியிடுகின்றன. வானொலி,  தொலைக்காட்சி நிறுவனங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒலி, ஒளிபரப்புகின்றன. அவற்றுள் கலாசார நிகழ்ச்சிகளும் விழாவின் அர்த்தம் குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெறுகின்றன.

பொங்கல் விழா குறித்த முக்கியமான வரலாற்றுச் செய்தி அது ஒரு காலத்தில் ‘தமிழர் திருநாள்’ என்று கொண்டாடப்பட்டது. கடந்த 1950-களில், சிங்கப்பூரிலும் மலாயாவிலும் தமிழ்ச் சமூகத் தலைவர்கள் பொங்கலைத் தமிழர் ஒற்றுமை நாளாக அறிவித்து, அதைத் தமிழர் திருநாள் என்று அழைத்தனர். தமிழர் திருநாள் சமூகத்தின் கணிசமான ஆதரவைப் பெற்றுச் சிங்கப்பூரில் மிகப்பெரிய சமயச்சார்பற்ற தமிழ் விழாவாக மாறியது. இருப்பினும், நாடு தழுவிய அவ்விழா 1980-களிலிருந்து படிப்படியாக அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது எனலாம்.

நன்றியுணர்வையும் சமூக, பண்பாட்டுக் கூறுகளின் சாராம்சங்களையும் தொடரச் செய்யும் பொங்கல் கொண்டாட்டம் மேலும் மேலும் மாறிக்கொண்டே வருகின்றது. பல்வேறு மாற்றங்கள் இருந்தபோதிலும், சிங்கப்பூர்த் தமிழர்களின் இளைய தலைமுறையினரிடையே பொங்கல் போற்றத்தக்க ஒரு பாரம்பரியமாக நீடிக்கிறது.



மேல்விவரங்களுக்கு
“Pongal.” Roots.sg. Accessed 1 August 2025. https://www.roots.gov.sg/en/ich-landing/ich/pongal#:~:text=The%20four%2Dday%20festival%20starts,lightning%2C%20thunder%2C%20and%20rains 
“Festivals in Singapore.” Roots.sg. Accessed 1 August 2025. https://www.roots.gov.sg/stories-landing/stories/festivals-in-singapore/festivals-in-singapore 
“Celebrate the Harvest: Indian Heritage Centre’s Pongal Open House 2025.” IndiPlomacy, 8 January 2025. https://indiplomacy.com/2025/01/08/celebrate-the-harvest-indian-heritage-centres-pongal-open-house-2025/ 
“What Is Pongal?” Indian Heritage Centre. Accessed 1 August 2025. https://www.indianheritage.gov.sg/pongalo-pongal/what-is-pongal.html 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA