அரவிந்த் குமாரசாமி



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

பன்முகத் திறன்கொண்ட கலைஞரான அரவிந்த் குமாரசாமி (பி. 1966), இந்திய நடனம், இசை மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் ஈடுபட்டு, சர்வதேச இந்தியக் கலைகள் சமூகத்தில் ஒரு முக்கிய நபராக உள்ளார். இளையராகச் சிங்கப்பூருக்கு வந்த அவர், 2022-ஆம் ஆண்டு, அவரது 35 ஆண்டுகாலக் கலைப்பணியின் அங்கீகாரமாக சிங்கப்பூரின் ஆக உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கத்தைப் பெற்றார்.

இலங்கையில் பிறந்த அரவிந்த், இலங்கையிலும் இந்தியாவிலும் பரதநாட்டியம், கர்நாடக இசை ஆகியவற்றில் புகழ்பெற்ற சில ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். தம் 18-ஆம் வயதில் அரங்கேற்றம் கண்டு, மூன்றாண்டு கழித்து 1987-இல், சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். பாரம்பரிய நடனத்திலும் இசையிலும் தமது திறன்களைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டவர், டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் 1987 முதல் 1993 வரை நடிப்பு, மேடை நிகழ்ச்சி முறைகள் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். பின்னர் நிருத்யாலயா கவின் கழகத்தில் நடனம் கற்பித்தார். பாஸ்கர் கலைக்கூடத்தில் அதன் தயாரிப்புகளுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.

அரவிந்த், அப்சரஸ் ஆர்ட்ஸில் 1999-ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பங்களித்து வந்துள்ளார். அதன் நிறுவனர் நீலா சத்தியலிங்கத்துடன் இணைந்து நடன, இசை பயிற்றுவிப்பாளராகவும் கலை இயக்குநராகவும் பணியாற்றினார். அவரது தலைமையில், 'அங்கோர் வாட்: தி அன்டோல்ட் ஸ்டோரி', ‘அகதி’, ‘பரமபதம்’, ‘அரிசி’  உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட தயாரிப்புகளைக் கொண்ட ஒரு தொகுப்பை அப்சரஸ் ஆர்ட்ஸ் உருவாக்கியுள்ளது. நீலா சத்தியலிங்கத்தின் மறைவுக்குப்பின் நிறுவனத்தை அரவிந்த் வழிநடத்தி வருகிறார். கதை, நடனம், இசையமைப்பு மட்டுமின்றி ஒளி, ஒலியமைப்பு, ஆடை, அரங்க வடிவமைப்பு எனப் பல்வேறு அம்சங்களிலும் பங்காற்றி வருகிறார். 

சிங்கப்பூரின் கலைவளர்ச்சிக்குப் பல்வேறு வழிகளில் பங்காற்றிவரும் அரவிந்த், ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி இந்திய இசைக்குழுவிற்கு 1995 முதல் 2000 வரை இசைப்பயிற்சி அளித்துள்ளார். கோலம் ஆயர் இந்திய இளையர் இசைக்குழுவை 2000ஆம் ஆண்டில் நிறுவினார். மேலும், தேசிய தினக் கொண்டாட்டங்களிலும் சிங்கே ஊர்வலங்களிலும் மாணவர்களுக்கு இசை, நடனப் பயிற்சிகளை அளித்துள்ளார்.

அரவிந்த், 2012-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரிலும் 2021-ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவிலும் ஆண்டுதோறும் இந்திய நிகழ்கலைகள் மாநாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். மின்னிலக்க, தொழில்நுட்பப் புத்தாக்கங்களையும் சோதனை முயற்சிகளையும் கலைத்துறையில் முன்னெடுப்பதன் வழியாகச் சிங்கப்பூரில் பாரம்பரியக் கலைகளுக்குத் தனித்துவமான அடையாளத்தை வழங்க முயற்சி செய்கிறார். எடுத்துக்காட்டாக, கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில், அரவிந்த் வழிகாட்டலில் மின்னிலக்க நடனத்தை அடிப்படையாகக்கொண்டசீதா’, ‘அமரா’ ஆகிய திரைப்படங்களைக் குறிப்பிடலாம். கலாசாரப் பதக்கத்தைப் பெறுவதற்கு முன்னரே 1999-இல் அவருக்கு இளங்கலைஞர் விருதும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. 




மேல்விவரங்களுக்கு
Lim How Ngean. Cultural Medallion 2022: Aravinth Kumarasamy. National Arts Council, 2022. 
https://www.nac.gov.sg/docs/default-source/singapore-arts-scene-files/cultural-medallion/2022/cm-aravinth-kumarasamy.pdf?sfvrsn=6a7253bc_4
“பரதக்கலையில் ஆண்கள்: சமூகத்தினர் கருத்து.” தமிழ் முரசு, 25 April 2022. https://www.tamilmurasu.com.sg/singapore/story20220425-87699.html 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA