பிலிப் ஆண்டனி ஜெயரத்னம் (பி. 1964) சிங்கப்பூர் அனைத்துலக வணிக நீதிமன்றத்தின் தலைவர், சிங்கப்பூர் சட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர் என்று புகழ் பெற்றவர்.
தொழிலாளர் கட்சியின் மேனாள் தலைவர் ஜே.பி. ஜெயரத்னத்தின் மகனும், சீர்திருத்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கென்னத் ஜெயரத்னத்தின் தம்பியுமாகிய பிலிப் ஜெயரத்னம் 1986-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் முதல் வகுப்புநிலையில் இளநிலைப் பட்டம் பெற்றார். அவர் 2003-இல் 38 வயதில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அத்தகைய உயரிய அங்கீகாரத்தைப் பெற்ற ஆக இளையவர்களில் அவரும் ஒருவர். கட்டுமானத் துறை உட்பட பல்வேறு துறைகளில் அவரது நிபுணத்துவம் விரிவடைந்து, அவற்றில் ஒரு முன்னணி வழக்கறிஞராகவும் சச்சரவுகளைத் தீர்ப்பவராகவும் கருதப்பட்டார்.
ஜெயரத்னம் 2002 முதல் 2004 வரை சிங்கப்பூர்க் கட்டுமானத் துறைச் சட்ட சங்கத்தின்நிறுவனத் தலைவராகவும், 2004 முதல் 2007 வரை சிங்கப்பூர்ச் சட்ட சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர், 2011-இல், சிங்கப்பூரின் ஆகப் பழமைவாய்ந்த சட்ட நிறுவனமான ரோடைக் & டேவிட்ஸன்-இல் நிர்வாகப் பங்குதாரராகப் பொறுப்பேற்றார். அவரது தலைமையின்கீழ், அந்த நிறுவனம் டெண்டன்ஸ் என்னும் பன்னாட்டுச் சட்ட நிறுவனத்துடன் 2016-இல் இணைந்தது. அதில், ஜெயரத்னம் ஆசியான் வட்டாரத் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உலகளாவிய துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
ஜெயரத்னம் 2021-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர், அந்த ஆண்டின் இறுதியில் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். மறு ஆண்டு, வணிக வழக்குகளை நிர்வகிப்பதற்கான சிறந்த நடைமுறைகளை உருவாக்க, உச்ச நீதிமன்றத்தின் வணிக நடைமுறைக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்து, 2023-இல், அவர் சிங்கப்பூர்ப் பன்னாட்டு வணிக நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவிலும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார்.
அவரது நீதித்துறை நியமனங்களுக்கு முன்னர்,ஜெயரத்னம் பொதுச் சேவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். பொதுச் சேவை ஆணைக்குழுவில் 11 வருடமும் ஒருங்கிணைந்த மாற்றுச் சச்சரவுகளுக்குத் தீர்வு காணும் மையமாக விளங்கும் மேக்ஸ்வெல் சேம்பர்ஸின் தலைவராகப் பத்தாண்டுகளும் சேவையாற்றியுள்ளார். பொதுச் சேவைக்கான அவரது அர்ப்பணிப்பு 2021-இல் பொதுச் சேவை நட்சத்திரத்துடன் அங்கீகரிக்கப்பட்டது. சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் நேர்மை, நியாயம், நெறிமுறை நடத்தை ஆகியவற்றின் முழு உருவகமாக விளங்கியதற்காகச் சிங்கப்பூர்ச் சட்ட சங்கத்தால் அதே ஆண்டில் சி.சி. டான் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
அவரது வழக்கறிஞர் தொழிலுக்கு அப்பால், ஜெயரத்னம் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் உள்ளிட்ட பல படைப்புகளை வெளியிட்டுள்ள எழுத்தாளர். அவரது இலக்கியப் பணிக்காக 1993-இல் சிறந்த இளம் கலைஞர் விருதையும், 2003-இல் தென்கிழக்காசிய இலக்கிய விருதையும் பெற்றார்.
மேல்விவரங்களுக்கு
Ang, Qing. “Philip Jeyaretnam Appointed Supreme Court Judicial Commissioner.” The Straits Times, 8 December 2020. https://www.straitstimes.com/singapore/philip-jeyaretnam-appointed-supreme-court-judicial-commissioner.
Nureza Ahmad, Nora. “Jeyaretnam, Philip Anthony.” Singapore Infopedia. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=64115dd6-f917-4dac-b589-b53b4e03c122.
“Justice Philip Jeyaretnam.” SG Courts. Accessed on 1 August 2025. https://www.judiciary.gov.sg/who-we-are/justice-philip-jeyaretnam.
“Philip Jeyaretnam.” Wikipedia. Accessed on 1 August 2025. https://en.wikipedia.org/wiki/Philip_Jeyaretnam.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |