இராம கண்ணபிரான் (பி. 1943) சிங்கப்பூரின் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். கலாசாரப் பதக்க விருதாளர்.
கண்ணபிரான் இந்தியாவிலுள்ள அம்மாப்பேட்டையில் பிறந்தார். அங்குத் தொடக்கப்பள்ளிக் கல்வியைப் பயின்று தம் 10-ஆம் வயதில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். சிங்கப்பூரில் மெக்நேயர் ரோடு ஆங்கிலப் பள்ளி, ராஃபிள்ஸ் பள்ளி என அவரது கல்வி தொடர்ந்தது. அவரது தந்தை 1922-இல் தொடங்கி நடத்திவந்த புத்தகக் கடையின் வழியாக அவருக்கு நூல்களை வாசிக்கும் பழக்கம் சிறுவயதிலேயே ஏற்பட்டது. வாசிப்பின் தாக்கத்தில் 1950-களின் இறுதியிலிருந்து புனைவுகளை எழுதத் தொடங்கினார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மூன்றாண்டுகள் பயிற்சிபெற்று 1966-இல் ரோசைத் தொடக்கப்பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியராகச் சேர்ந்தார். அப்பணியில் 19 ஆண்டுகள் தொடர்ந்தவர் பின்னர் அதே பள்ளியில் 1985-இல் தமிழாசிரியரானார். அக்காலக்கட்டத்தில், அமெரிக்காவின் அயோவா அனைத்துலக இலக்கியப் படைப்பாக்கத் திட்டத்தில் 1988-இல் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துக் கலந்துகொண்டபோது பீடம் குறுநாவலை எழுதினார். ஆசிரியராக 37 ஆண்டுகள் பணியாற்றி 2002-இல் விருப்ப ஓய்வுபெற்றார். அதன்பின் கட்டுரைகள் எழுதுவதைத் தொடர்ந்தார்.
சிறுகதைகளைப்பற்றிய விளக்கங்கள், திறனாய்வுகள், நூலறிமுகங்கள், அணிந்துரை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார் கண்ணபிரான். அவரது புகழ்பெற்ற சில சிறுகதைகள், சிங்கப்பூரில் உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி, பல்கலைக்கழக நிலைகளில் துணைப்பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. சில படைப்புகள் சிங்கை, மலேசிய வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளதோடு ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளன.
படைப்பிலக்கியம் மட்டுமின்றி இலக்கியச் செயல்பாடுகளிலும் கண்ணபிரான் தீவிரமாக ஈடுபட்டார். எழுத்தாளர் அகிலன் 1975-இல் சிங்கப்பூருக்கு வந்தபோது, தொடர் இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினராகக் கண்ணபிரான் தம் இலக்கியச் செயல்பாடுகளைத் தொடங்கினார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினராக ஈராண்டுகள் பங்காற்றினார். சிங்கப்பூர் இலக்கியக் களத்தை 1970-களில் அமைத்த பத்து எழுத்தாளர்களுள் அவரும் ஒருவர். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலைகள் மையத்தின் குழு உறுப்பினராக 1990-களின் இறுதியில் செயலாற்றினார். மையத்தின் புத்தாக்கக் கலைப்பயிற்சித் திட்டத்தில் 1996 முதல் 2001 வரை பயிலரங்குகளை நடத்தியுள்ளார். சிங்கப்பூர்த் தேசியக் கலை மன்றத்தில் 1991 முதல் 2018 வரை ஆலோசனைக் குழு உள்ளிட்ட குழுக்களில் உறுப்பினராகப் பங்காற்றினார். சிங்கப்பூரில் பல இலக்கியப் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றியவர்.
இருபத்தைந்து ஆண்டுகள் (1980), சோழன் பொம்மை (1981), பீடம் (1992), வாழ்வு (2015), அமைதி பிறந்தது (2018), இராம கண்ணபிரான் கதைகள் 1958-1992 (2021), சிறுகதை - கூறுகளும் செப்பனிடுதலும் (2021) உள்ளிட்ட பல்வேறு புனைவு, அபுனைவுத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.
சிங்கப்பூர்த் தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றத்தின் புத்தக விருது (1982), அயோவா பல்கலைக் கழகத்தின் கௌரவ இலக்கிய விருது, (1988), தென்கிழக்காசிய எழுத்து விருது (1990), மோன்ட் பிளாங்க் இலக்கிய விருது (1997) உள்ளிட்ட பல்வேறு விருதுகளுடன் சிங்கப்பூர்க் கலைத்துறையில் ஆக உயர்ந்த விருதான கலாசாரப் பதக்கத்தையும் (1998) பெற்ற அவருக்கு, மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி வாழ்நாள் சாதனையாளர் விருதை (2022) வழங்கிச் சிறப்பித்துள்ளது.
மேல்விவரங்களுக்கு
“இராம கண்ணபிரான்,” தமிழ் விக்கி, 15 November 2022. https://tamil.wiki/wiki/இராம_கண்ணபிரான்
Vallinam Magazine. “இராம. கண்ணபிரான் ஆவணப்படம்,” Youtube Video, 2 January 2019. https://www.youtube.com/watch?v=QIcThn1CYOw
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |