கண்ணோட்டம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

கண்ணோட்டம், 1965-இலிருந்து 1991 வரை கலாசார அமைச்சு வெளியிட்ட வார இதழான மிரரின் தமிழ்ப் பதிப்பு. அவ்விதழில் அரசாங்கக் கொள்கைகள், உள்ளூர்ப் போக்குகள், ஆளுமைகளின் சுயவிவரங்கள் எனப் பல செய்திகள் வெளியிடப்பட்டன.

தொடக்கத்தில் மலேசியன் மிரர் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ஆங்கில நடப்பு விவகார இதழ், மலேசியாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இருந்தபோது, மார்ச் 1965-இல் சிங்கப்பூரின் கலாசார அமைச்சால் தொடங்கப்பட்டது. மலேசியாவில் உள்ள பொது அமைப்புகளுக்கும் குடிமை அமைப்புகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. சிங்கப்பூரின் அன்றைய கலாசார அமைச்சர் எஸ். ராஜரத்தினம் உருவாக்கிய அவ்விதழ், மலேசிய, வெளிநாட்டு செய்தித்தாள்களில் இருந்த நடப்பு விவகாரங்கள் பற்றிய கட்டுரைகளையே பெரிதும் மறுபிரசுரம் செய்துவந்தது. 

ஜூலை 1965-இல், சிங்கப்பூருக்கும் மலேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கும் இடையே பதற்றம் அதிகரித்தபோது, ராஜரத்தினத்திற்கும் மத்தியக் கல்வி அமைச்சர் முகமது கிர் ஜொஹாரிக்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் நிகழ்ந்தது. மலாயாவில் உள்ள பள்ளிகளுக்கு இதழை விநியோகித்ததன் மூலம் சிங்கப்பூர் அரசாங்கம் கீழறுப்புப் பிரச்சாரம் செய்ததாக ஜொஹாரி குற்றம் சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது. சிங்கப்பூர், ஆகஸ்ட் 1965-இல் மலேசியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதும், அவ்விதழ் தி மிரர் என மறுபெயரிடப்பட்டது. விநியோகத்தின் உச்சக் கட்டத்தில், இதழ் வாரத்திற்கு ஏறத்தாழ 60,000 படிகள்வரை அச்சிடப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில்தான் சீன, மலாய் மொழிப் பதிப்புகளுடன் மிரரின் தமிழ்ப் பதிப்பான கண்ணோட்டமும் தொடங்கப்பட்டது. கண்ணோட்டம், எட்டுப் பக்கங்களில், தொழிலாளர் குரல், சமய நல்லிணக்கச் செய்திகள், சிங்கப்பூரின் வெளியுறவுக்கொள்கை, கடிதங்கள், கருத்துத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைக் கொண்டிருந்தது.

பின்னர், 1970-களின் பிற்பகுதியில், தி மிரர், மாதமிருமுறை இதழாக மாற்றப்பட்டது. மீள்பிரசுரங்களுக்குப் பதிலாக, கல்வி, வீட்டுவசதி, சுகாதாரம், சுற்றுலா எனப் பல்வேறு அம்சங்களைப் பற்றிக் கலாசார அமைச்சையும் பிற வாரியங்களையும் சேர்ந்த அதிகாரிகள் எழுதிய மூலக்கட்டுரைகளை அதிகம் வெளியிட்டது. பின்னர், 1980-களின் நடுவில் தி மிரர் மீண்டும் பெயர்மாற்றம் பெற்று மிரர் என்றானது . தொடக்கத்தில் இலவசமாகத் தரப்பட்ட இதழ், பின்னர் அதன் விநியோகம் 10,000 பிரதிகளாகக் குறைந்துபோனபோது, 1988-இல் கட்டணச் சந்தா முறையை அறிமுகப்படுத்தியது; ஆண்டுக்கு 24 இதழ்களுக்கு 10 வெள்ளி வசூலிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மிரரின் கடைசிப் பதிப்பு 15 செப்டம்பர் 1991 அன்று வெளியிடப்பட்டது. இதழ் நிறுத்தம் குறித்து விளக்கமளித்த அமைச்சின் செய்தித் தொடர்பாளர், சிங்கப்பூரில் உள்ள அச்சு, ஒளிபரப்பு ஊடகங்கள் இரண்டும் அரசாங்கக் கொள்கைகளையும் திட்டங்களையும் விரிவாகவும் ஆழமாகவும் விளக்கத் தொடங்கியுள்ளதால் மிரர் வெளியீட்டுக்கான தேவை இல்லாமற் போய்விட்டது என்றார். அந்தக் காலக்கட்டத்தில் கண்ணோட்டம் எப்படிச் செயல்பட்டது, எப்போது நின்றுபோனது என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.



மேல்விவரங்களுக்கு
“Publication of Mirror to Cease This Month After 26 Years,” The Straits Times, 14 September 1991, 8. (From Newspaper SG)
“Mirror Goes For a More Balanced Approach,” The Straits Times, 26 July 1986, 12. (From Newspaper SG)

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA