அகம் நாடகக்கூடம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

உயர்தர மேடை நாடகங்களை நாடகப் பிரியர்களுக்குக் கொண்டுசேர்ப்பதைத் தன் இலக்காகக் கொண்டு, 30 ஜனவரி 2019 அன்று தொடங்கப்பட்டது அகம் நாடகக்கூடம். சிங்கைவாழ் தமிழர்கள் தம் சமூகத்தையும் பரந்த சமுதாயத்தையும் விமர்சன நோக்குடன் கவனித்து, கலையுணர்வோடு உறவாடத் தூண்டும் வகையில் ஆக்கப்பூர்வமான மேடை நாடகங்களைப் புத்தாக்கத்துடன் படைப்பதே அகத்தின் அடிப்படை நோக்கம். நாடகக் கலையில் ஆர்வம் மிக்க சுப்ரமணியன் கணேஷ், சக ஆர்வலர்களுடன் இணைந்து அவ்வமைப்பை நிறுவினார். தன் நோக்கம் நிறைவேற, சிங்கைப் பண்பாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தப் பாடுபடும் நாடக முன்னோடிகள் பலருடனும் இக்கலையில் ஈடுபாடுகொண்ட இளம் கலைஞர்களுடனும் கைகோத்து அகம் நாடகக்கூடம் பயணிக்கிறது. மேலும், புதிய சிந்தனைகள், அணுகுமுறைகளைச் சோதித்துப் பார்க்க விரும்பும் நாடகக் கலைஞர்களுக்கு அவ்வமைப்பு ஓர் ஆடுகளமாக விளங்குகிறது.

மகாபாரதத்தின் துரியோதனனை மையப்படுத்தி அதிமெய்நிகர் தொழில்நுட்பப் படைப்பு ஒன்றை 2021-ஆம் ஆண்டு அகம் அறிமுகம் செய்தது. சிங்கப்பூரில் அதுவே அத்தொழில்நுட்பத்தோடு படைக்கப்பட்ட முதல் தமிழ் நாடகப் படைப்பு. சோதனை முயற்சிகளைத் தவிர்த்து, ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ', ஜார்ஜ் ஓர்வெலின் 'விலங்குப்பண்ணை', தன்வரலாற்று நாடகமாகிய 'ரே சோமா' போன்ற நாடகங்களையும் அகம் மேடையேற்றி உள்ளது. தமிழ் மேடை நாடகங்களைப் பற்றிய ஆக்கப்பூர்வ உரையாடல்களுக்கான தளங்கள் சிங்கப்பூரில் குறைவு என்பதால் அவற்றை ஊக்குவிக்கும் வகையில் 'நாடகவாதி' எனும் நாடகக் கருத்தரங்கினை 2019-ஆம் ஆண்டிலிருந்து அகம் ஏற்பாடு செய்து வருகிறது. பல்வேறு நாடகக் குழுக்களை இணைக்கும் இத்தளத்தில் நாடகம் சார்ந்த பலவித அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளன. ஒரு நாடகத் தயாரிப்பின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை படைப்பாளர்கள் சிலருக்கு தொடர்பயிற்சி அளிப்பதும் ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் மூன்று மாத நாடகக்கலை முகாம் நடத்துவதும் அகம் நாடகக்கூடத்தின் சிறப்பம்சங்கள் எனலாம். கடந்த 2022-ஆம் ஆண்டு அகம் நாடகக்கூடம் பொதுநலநோக்கு நிறுவனமாக அங்கீகாரம் பெற்றது. அகம் எஸ்பிளனேடுடன் இணைந்து தயாரித்து, 2023-ஆம் ஆண்டு கலா உற்சவ நாடக விழாவில் அரங்கேற்றிய ‘பச்சை பங்களாவில் இரட்டைக் கொலை’ நாடகம், ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் லைஃப் நடத்திய நாடகவிழாவில் ஆகச்சிறந்த ஆன்ஸாம்பிள் விருதை 2024-இல் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை எந்தத் தமிழ் நாடகக் குழுவும் செய்யாத சாதனையாக, அகம், பிளாக் பாக்ஸ் என்னும் சிறு நாடகக் கூடத்தை 2025-இல் நிறுவியது. தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் 110 இருக்கைகளோடு அமைந்திருக்கும் அந்தக் கூடத்தைக் கலாசார, சமூக, இளையர் அமைச்சரும் இரண்டாம் சட்ட அமைச்சருமாகிய எட்வின் தோங் திறந்து வைத்தார். தம் உரையில், அந்தக் கூடம் “தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி நம் பல்பண்பாட்டுச் சமுதாயத்தில் பெருமையோடு வாழும் அத்தனை சிங்கப்பூரர்களுக்கும் முக்கியமானது” என்றார்.




மேல் விவரங்களுக்கு
Agam Theatre Lab. Accessed 1 August 2025. https://www.agam.com.sg/ 
Straits Times. “Tamil group Agam Theatre Lab marks milestone as major company with new black box space.” 19 March 2025. Accessed 1 August 2025. https://str.sg/dk4
Tamil Murasu. " Agam Theatre's new black box theatre". 14 April, 2025. Accessed 1 August 2025. https://www.tamilmurasu.com.sg/lifestyle/agam-theatre-group-has-reached-milestone-new-black-box-theatre

To read in English 

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.

 

 





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA