ஆனந்த பவன் சைவம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சிங்கப்பூரில் நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவரும் ஆனந்த பவன் சைவம், 1924-இல் குழந்தைவேலு முத்துசாமி கவுண்டரால் நிறுவப்பட்டது. இன்றிருப்பவற்றுள் ஆகப்பழமையான இந்த இந்தியச் சைவ உணவகம், பாரம்பரிய உணவுகளில் புத்தாக்கங்களைப் புகுத்துவதோடு சமூகத் தொண்டுகளிலும் ஈடுபட்டுவருகிறது. 

தொடக்கத்தில் ஆனந்த பவன் என்னும் பெயரில் 221, சிலிகி ரோட்டில் எல்லிசன் கட்டடத்தில் அமைந்திருந்த இவ்வுணவகம், 1996-இல் 58 சிராங்கூன் ரோட்டில் ஒரு கிளையைத் தொடங்கியது. வாடிக்கையாளரே உணவைத் தேர்ந்தெடுத்து, கட்டணம் செலுத்தி, உணவு தயாரானவுடன் சென்று எடுத்துக்கொள்ளும் முறையை 1990-களிலேயே அறிமுகப்படுத்திய முதல் இந்திய உணவகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ்க் கணினி வந்தவுடன் தமிழிலேயே ரசீதுகளை அச்சடித்துக் கொடுப்பதையும் சமையல் சாமான்களின் வரவு செலவைத்  தமிழிலேயே கணக்கெடுப்பதையும் முதலில் தொடங்கிய உணவகம் என்னும் பெருமையும் அதற்குண்டு. தொடர்ந்து தொழில் விரிவடைந்து, தீவெங்கும் ஏழு இடங்களில் செயல்பட்டு வந்த ஆனந்த பவன், எல்லிசன் கட்டட உணவகத்தை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு காரணமாக 2018-இல் மூட நேர்ந்தது. சையது அல்வி ரோட்டுக் கிளையும் சாங்கி விமான நிலையக் கிளையும் 24 மணி நேரமும் இயங்குகின்றன. சாங்கி கிளையில் ஆசியாவின் முதல் நிகழ்நேர மின்னிலக்க உணவுப் பட்டியல் பலகைகளும் ஆர்எஃப்ஐடி தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட உணவு மேசைகளும் இடம்பெற்றுள்ளன.


தென்னிந்திய, வட இந்திய உணவு வகைகளுடன் சீன உணவு வகைகளை இணைத்துப் புத்தாக்கத்துடன் உருவாக்கப்பட்டப் புதியவகைச் சைவ உணவுகள் பரிமாறப்படுகின்றன. ஆனந்த பவனின் உணவுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான உணவுவகைகளுள் நனிசைவ, சமண உணவுகளும் அடங்கும். ‘கேழ்வரகுக் கூழ்’ முதலிய பாரம்பரிய உணவுகளை மீட்டெடுத்துப் பரவலாக்குவதோடு ‘இட்லி பர்கர்’ போன்ற புதிய உணவுகளையும் வழங்குகிறது. பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மறுபயனீடு செய்யாமை, செயற்கைச் சுவையூட்டிகளைச் சேர்க்காமை ஆகிய கொள்கைகளும் அவ்வுணவகத்திற்கு உண்டு. 

நிறுவனரின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன்கள் மு.கு. ராமச்சந்திரா, மு.கு. நடராஜன் ஆகியோரின் பொறுப்பில் உணவகம் இயங்கி வந்தது. ராமச்சந்திராவின் மறைவுக்குப்பிறகு, அவரது மகன் வீரன் எட்டிக்கன் ஆனந்த பவனின் தலைமை நிர்வாக இயக்குநராக 2011-இலிருந்து செயல்பட்டு வருகிறார். ராமச்சந்திராவின் நினைவாக, 2010 முதல், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் இணைந்து மு.கு. ராமச்சந்திரா புத்தகப் பரிசு என்னும் இலக்கியப் பரிசை ஆண்டுதோறும் ஆனந்த பவன் வழங்கி வருகிறது. 

சிங்கப்பூரிலேயே ஆகப் பெரிய முறுக்கைத் தயாரித்து, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் 2017-இல் இடம்பிடித்த ஆனந்த பவன், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலக்கட்டமான 2020-இல், சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு முறுக்கு உள்ளிட்ட 4,000 சிற்றுண்டிப் பொட்டலங்களை அன்பளிப்பாக வழங்கியது. காலமாற்றத்திற்கேற்பத் தொடர்ந்து தகவமைத்துக்கொண்டு நூற்றாண்டு கண்டுள்ள ஆனந்த பவன், 2021 முதல், வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்ற இயந்திர மனிதர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.



மேல்விவரங்களுக்கு
தமிழ் முரசு. “சிங்கப்பூர் எக்ஸ்போவில் தங்கியிருக்கும் 4,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிற்றுண்டி,” தமிழ் முரசு, 22 May 2020. https://www.tamilmurasu.com.sg/singapore/story20200522-44606.html

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here



Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA