தூய லூர்து அன்னை ஆலயம் 1888-இல் நிறுவப்பட்டு, சிங்கப்பூரின் முதல் தமிழ் கத்தோலிக்க ஆலயமாக விளங்குவதோடு சிங்கப்பூரின் தேசிய நினைவுச்சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழ்க் கத்தோலிக்கச் சமூகத்தினர், இங்குள்ள ஆகப் பழைமையான கத்தோலிக்கத் தேவாலயமான குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் (1847), ஐரோப்பியர், யூரேசியர் ஆகியரோடு இணைந்து வழிபட்டனர். பின்னர், செயிண்ட்ஸ் பீட்டர் அண்ட் பவுல் தேவாலயத்திற்குச் (1870) செல்லத்தொடங்கினர். அங்குத் தமிழில் சரளமாகப் பேசும் அருட்தந்தை பியர் பாரிஸ் தமது சேவையை இந்தியச் சமூகத்திற்கு வழங்கினார். அவர், 1883-இல் மறைந்தபிறகு, அருட்தந்தை ஜோகிம் ஏ.எம். மெனுவ்ரியர் பொறுப்பேற்றதோடு, ஈராண்டுகளுக்குள், 60 பேரைக் கொண்ட தமிழ்க் கத்தோலிக்கச் சமூகம் 300 பேராக வளர்ச்சியடையவும் வழிசெய்தார். அதன் விளைவாக அச்சமூகத்திற்குப் புதிய தேவாலயம் தேவைப்பட்டது.
நீரிணைக் குடியேற்றங்களின் ஆளுநராக இருந்த சர் ஃபிரடெரிக் வெல்ட் புதிய தேவாலயம் ஒன்றைக் கட்டுவதற்காக 1885-இல் ஓஃபிர் ரோட்டில் இருக்கும் ஓர் இடத்தை ஒதுக்கினார். மறு ஆண்டு, சிங்கப்பூரில் இருந்த மலாக்காவின் பேராயர் எடுவார்ட் காஸ்னியர் அப்புதிய தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார்; 1888-இல் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள ‘பசிலிக்கா ஆஃப் இம்மாகுலேட் கான்செப்ஷன்’ என்னும் புகழ்பெற்ற கத்தோலிக்க ஆலய வடிவமைப்பின் சாயலைச் சிங்கப்பூர் ஆலயத்தில் காணலாம். ஆலயம், அக்காலக்கட்டத்தில் ‘இந்தியத் தேவாலயம்’ என்றும் ‘தமிழ்த் தேவாலயம்’ என்றும் அழைக்கப்பட்டது.
மெனுவ்ரியர் அதன் முதல் மறைப்பணியாளராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர், பாதிரியார் லூயி பர்கோஃபர் 1896 முதல் 1935 வரை மொத்தம் 39 ஆண்டுகள் பணியாற்றினார். பாதிரிமார்கள் இருவரும் அவர்களின் பெயர்களைக்கொண்ட பித்தளைப் பொறிப்புகளின்மூலம் தேவாலயத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது (1942-1945), குண்டுவீச்சுத் தாக்குதல்களிலிருந்து தப்பித்த தேவாலயம், ஜப்பானிய ராணுவத்தின் தலைமையகமாக மாற்றப்பட்டது. பின்னர், 1974-இல், தேவாலயம் எல்லா இனப்பிரிவுகளையும் மொழிப்பிரிவுகளையும் சார்ந்த கத்தோலிக்கர்களுக்கு அதன் கதவுகளைத் திறந்தது. அதன் திருச்சபையின் பெரும்பகுதியினர் தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாக இருந்துவருவதால், 16-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் காட்சியளித்ததாக நம்பப்படும் கன்னி மேரி மாதாவை நினைவுகூரும் ஒன்பது நாள் அன்னை வேளாங்கண்ணி திருவிழாவையும் தேவாலயம் தன் ஆராதனைகளுள் ஒன்றாக இணைத்துக்கொண்டது. அதுமட்டுமன்றி, தமிழ் அறுவடைத் திருவிழாவாகிய பொங்கல் விழாவும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
தேவாலய உறுப்பினர்களுள் பலர் புலம்பெயர்ந்தவர்களாக இருப்பது, புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் நோக்கில் பல்வேறு சமூக முயற்சிகளை மேற்கொள்ள வழிவகுத்தது. மேலும், 2006-இல் நிறுவப்பட்ட லூர்து தமிழர் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர் நலவாழ்வுக் குழுவும் இலவச மருத்துவச் சோதனைகளையும் அடிப்படை ஆங்கிலக் கல்வியறிவு, கணினிப் பயிற்சி உள்ளிட்ட வகுப்புகளையும் நடத்தி வருகின்றன.
தூய லூர்து அன்னை தேவாலயம் 2005-இல் சிங்கப்பூரின் 52-ஆவது தேசிய நினைவுச் சின்னமாக அரசிதழில் பதிவு செய்யப்பட்டது.
மேல்விவரங்களுக்கு
Church of Our Lady of Lourdes. Accessed on 1 August 2025. https://ourladyoflourdes.sg/history-of-the-church
“Church of Our Lady of Lourdes, Singapore explained.” Explained Today. Accessed on 1 August 2025. https://everything.explained.today/Church_of_Our_Lady_of_Lourdes%2c_Singapore/
“Church of Our Lady of Lourdes.” Roots.sg. Accessed on 1 August 2025. https://www.roots.gov.sg/places/places-landing/Places/national-monuments/church-of-our-lady-of-lourdes
“Church of Our Lady of Lourdes.” StreetDirectory.com. Accessed on 1 August 2025. https://www.streetdirectory.com/travel_guide/singapore/historical_sites/151/church_of_our_lady_of_lourdes.php
Ng Kai. “National Monuments of Singapore: Church of Our Lady of Lourdes.” Wonderwall.sg, 13 March 2024. https://wonderwall.sg/places/national-monuments-of-singapore-church-of-our-lady-of-lourdes
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |