ஶ்ரீ மன்மத காருணீஸ்வரர் ஆலயம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

காலாங் ரோட்டிலிருந்த காலாங் முனிசிபல் எரிவாயு உற்பத்தி ஆலையின் பெயரில் காலாங் கேஸ்வொர்க்ஸ் சிவன் கோயில் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் ஆலயம் 1888 ஜனவரியில் நிறுவப்பட்டது. காலாங்கில் இந்துக்கள் அதிகமில்லை  என்றாலும், எரிவாயு ஆலையில் வேலை செய்த இந்து ஊழியர்கள் பலர் இந்த ஆலைக்குப் பக்கத்திலிருந்த குடியிருப்புகளிலும் அருகிலிருந்த கம்போங் பூகிசிலும் வசித்துவந்தனர். அந்த இந்துத் தொழிலாளர்கள் தாங்கள் வழிபட ஒரு சிறு கோயிலைக் கட்டி அதில்  சிவபெருமானை மூலவராக நிறுவினர்.

கோயிலைக் காங்கிரீட்டில் கட்டுவதற்காக, 1909-இல் 8,255 சதுர அடி நிலம், சு. வேலு வேந்தர், நாகலிங்கம் கதிரேசன், அண்ணாமலை மெரபா குமாரசாமி, வீரபத்ர முதலியார் ஆகியோருக்கு 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், திட்டம் நிதிப் பற்றாக்குறையினால் தடைப்பட்டது. தொடர்ந்து 1934-இல், கோயில் அறங்காவலர்களும் கோயிலில் வழிபடும் இந்து பக்தர்களும் இந்திய வள்ளல்களான வி. பக்கிரிசாமி பிள்ளையையும் அவரது சகோதரர் வி. நாராயணசாமி பிள்ளையையும் உதவிக்காக அணுகினர். சகோதரர்கள், சிங்கப்பூரின் இந்திய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் தங்கள் மறைந்த தந்தை கு. வேலுப் பிள்ளையின் நினைவாகக் கோயிலின் மறுகட்டுமானத்திற்கு நிதியளித்தனர்.

அவ்விரு சகோதரர்களையும், பாலகிருஷ்ணா முருகேசு திருநாளனையும் புதிய அறங்காவலர்களாக 1937-இல் அரசு நியமித்தது. அதே ஆண்டில், 19 ஆகஸ்ட் அன்று நடைபெற்ற குடமுழுக்கிற்குப்பிறகு, காலாங் முனிசிபல் காஸ் ஒர்க்ஸ் தொழிலாளர் மேற்பார்வையாளர் ஏ. வி. இருளப்ப பிள்ளையின் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. முதல் குடமுழுக்கிற்குப்பிறகு, 1951, 1974-ஆம் ஆண்டுகளில் மேலும் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றன. மற்ற தெய்வங்களுக்கான புதிய சன்னதிகளும் அமைக்கப்பட்டன. 

காலாங் கேஸ்வொர்க்ஸ் 1997-இல் செனோகோ கேஸ்வொர்க்ஸுக்கு இடம் பெயர்ந்தபிறகு, அங்கு வேலைபார்த்த இந்துத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கோயிலின் அடித்தளமாக இருக்கமுடியவில்லை.  ஶ்ரீ மன்மத காருணீஸ்வரர் ஆலயம் அதன் வரலாற்றுக்காகவும் பாரம்பரியமான தென்னிந்தியக் கோயில் கட்டடக்கலையும் பிரதான சன்னதியில் அமைந்துள்ள தூண்கள் போன்ற சில பாரம்பரியம் சாராத அம்சங்களும் இணைந்த தனித்துவமான கட்டடக்கலைக்காகவும் அங்கீகாரம் பெற்றது. அரசாங்கம் 2014-ஆம் ஆண்டில் அக்கோயிலுக்கு நெடுநாள் குத்தகை வழங்கியது.



மேல்விவரங்களுக்கு
“Mr. V. Narayanasamy.” Morning Tribune, 12 October 1937, 6. (From Newspaper SG)
“A Little History along the Kallang River.” Remember Singapore, 1 November 2016. https://remembersingapore.org/2016/11/01/kallang-river-history-landmarks/
“Hindus consecrate newly renovated Kallang temple.” The Straits Times, 25 April 1997, 17. (From Newspaper SG)

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.



Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA