உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 24 ஜூலை 2000 அன்று தொடங்கப்பட்டது. இது தமிழ் இணைய மாநாடுகளை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ, நிரந்தர அமைப்பாகவும் அனைத்துலகத் தகவல் தொழில்நுட்ப மன்றங்களில் உலகளாவிய தமிழ் இணையச் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் குரலாகவும் உள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் முக்கியப் பங்கு வகிக்காவிட்டாலும், 1980களில் அத்தொழில்நுட்பத்தை ஏற்றுப் பயன்படுத்துவதிலும் பரப்புவதிலும் சிங்கப்பூர் ஒரு தூண்டுகோலாக இருந்தது. ஆங்கிலத்தில் தகவல் தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அரசாங்கத்தின் பன்மொழிக் கொள்கையின் அடிப்படையில், மாண்டரின், மலாய், தமிழ் மொழிகளிலும் ஓரளவுக்கு அம்முயற்சிகள் பரவின.
அரசாங்கத்தின் பன்மொழிக் கொள்கையையும் ஆதரவையும் பயன்படுத்தி, சிங்கப்பூரில் இணையச் சேவைகள், தொழில்நுட்பம் முதலியவற்றை முன்னெடுத்த முனைவர் டான் டின் வீ, தமிழாசிரியரும் தகவல் தொழில்நுட்ப ஆர்வலருமான நா. கோவிந்தசாமியின் வலுவான ஆதரவுடன் தமிழ் இணைய ஆர்வலர்களைத் திரட்டுவதில் தனிப்பட்ட ஆர்வம் காட்டினார். [பார்க்க: தமிழ் இணையம்] முதல் அனைத்துலகத் தமிழ் இணைய மாநாட்டை அவர்கள் இருவரும்தான் தொடங்கி வைத்தனர். தமிழ்த் தகவல் செயலாக்க, இணைய வளங்களுக்கான அனைத்துலகக் கருத்தரங்கம் (TamilNet97), சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் 1997-ஆம் ஆண்டு மே 17-18 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விசைப்பலகை உள்ளீட்டு முறைகள், மொழிச் செயலாக்கச் சிக்கல்கள், எழுத்து அமைப்புச் சிக்கல்கள், உலகளாவிய வலையில் தமிழ் என அன்று பலரையும் ஈர்த்துக்கொண்டிருந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, 1999-ஆம் ஆண்டு சென்னையில் அடுத்த தமிழ் இணைய மாநாட்டைத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து, தமிழ்நெட்99 என்று அதை அழைத்தது. தமிழ் இணைய வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக அமைந்தது. ஏனெனில் இது தமிழ் விசைப்பலகையைத் தரப்படுத்துதல், தமிழ் எழுத்துகளில் எழுத்துருக் குறியீட்டைத் தரநிலைப்படுத்துதல் ஆகியவற்றில் அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஒருமித்த கருத்தை அடையக் குறிப்பிட்ட இலக்கை வகுத்தது. தமிழ் 99 விசைப்பலகை தமிழுக்கான தரப்படுத்தப்பட்ட உள்ளீட்டு முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் அன்று நடப்பிலிருந்த பல குறியீட்டுத் திட்டங்களிலிருந்து இரண்டு மட்டுமே களச்சோதனைகளுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
மூன்றாவது மாநாடு 2000-ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்படவிருந்தது, ஆனால் அரசியல் காரணங்களால் அது தடைப்பட்டது. மாநாட்டுத் தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்க, மூன்று மாதங்கள் மட்டுமே எஞ்சியிருந்தபோதிலும், மாநட்டை ஏற்றுநடத்த சிங்கப்பூர் முன்வந்தது. சிங்கப்பூர் அரசின் தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன், 2000-ஆம் ஆண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்ட தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இணையம் 2000 மாநாட்டை, 2000-ஆம் ஆண்டு ஜூலை 22-24 தேதிகளில் நடத்தியது. குறுகிய காலமே இருந்தபோதிலும், ஒருங்கிணைப்புக் குழுவும் அரசும், ஒருபுறம் பொதுமக்களிடம் ஆர்வத்தைத் தூண்டவும் மறுபுறம் சிங்கப்பூரை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமாக நிலைநிறுத்தவும் இம்மாநாட்டை ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதின. மாநாட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்காக, முதல்முறையாக மேலும் இரு தளங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டன -- ஒன்று தமிழ்த் தொழில்நுட்பப் பொருள்கள், சேவைகளின் கண்காட்சி; மற்றொன்று வர்த்தக நடுவம். தொழில்முனைவர்களும் அரசாங்கப் பேராளர்களும் மாநாட்டில் கலந்துகொள்ளும் அதே வேளையில் அனைத்துலக அளவில் வணிக ஒப்பந்தங்கள் செய்வதற்கும் இது வழியமைத்தது. மூன்று தளங்கள் கொண்ட இந்த மாநாடு 35,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 600 பேராளர்களையும், 10க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 20 நிறுவனங்களையும் ஈர்த்தது.
இதே மாநாட்டில்தான், மேற்கூறியவாறு உத்தமம் என்னும் அனைத்துலக நிறுவனம் தொடங்கப்பட்டது. உத்தமத்தின் முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய சிறப்பான மாநாட்டை உருவாக்கிப் படைத்ததில் சிங்கப்பூர் வெளிப்படுத்திய திறமை மாநாட்டுத் தலைவர்களையும் மற்ற முக்கிய பேராளர்களையும் கவர்ந்தது. அவர்கள் சிங்கப்பூரில் உத்தமம் தலைமையகத்தை நிறுவி அதன் முதல் நிர்வாக இயக்குநராக சிங்கப்பூரரான அருண் மகிழ்நனை நியமிக்க முடிவுசெய்தனர். சிங்கப்பூர் அரசின் தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையம், உத்தமத்தின் ஊதியம் பெறும் ஒரே அலுவலராக நாரா ஆண்டியப்பனை நிர்வாக அதிகாரியாக நியமித்தது.
அடுத்த மூன்று தமிழ் இணைய மாநாடுகள் 2001, 2002, 2003-ஆம் ஆண்டுகளில் முறையே மலேசியா, அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றில் நடைபெற்றன. அடுத்த மாநாடு 2004-இல் சிங்கப்பூருக்குத் திரும்பியது. இதற்கு முன்னர் 2000-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அறிமுகப்படுத்திய முத்தள மாநாடு என்னும் மாதிரிக்குப் பதிலாக, நிபுணர்களின் நெடிய, ஆழ்ந்த விவாதத்திற்கேற்ற ஒரு சிறிய மாநாட்டு வடிவமைப்பை அறிமுகப்படுத்த சிங்கப்பூர்க் குழு முடிவு செய்தது. சுமார் 100 பேர் பங்கேற்ற இச்சிறிய மாநாடு இணையத்தின் தொழில்நுட்பத்தையும் தரநிலைகளையும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்குப் பெருந்துணையாக இருந்தது. உத்தமத்தின் சிங்கப்பூர்க் கிளை 2008-இல் எஸ். மணியம் என்பாரிடம் ஒப்படைக்கப்பட்டது, அவர் 2010-இல் உத்தமத்தின் நிர்வாக இயக்குநரானார். பின்னர், உத்தமம், 14-ஆவது தமிழ் இணைய மாநாட்டை சிம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2015-இல், மே 30 முதல் ஜூன் 1 வரை நடத்தியது.
உத்தமத்தின் முக்கியச் சாதனைகளில் ஒன்று, தமிழ் எழுத்துருக் குறியாக்கத்தில் ஈடுபட்டிருந்த பலதரப்பினரும் ஒன்றுகூடிப் பேசுவதற்கான ஒரு தளத்தை உருவாக்கியதாகும். மேலும், தமிழ் இணைய மாநாட்டுத் தொடர் மூலம் தமிழ் எழுத்துருக் குறியாக்கத்தை ஒருமைப்படுத்தும் முயற்சிகளிலும் யுனிகோட் கூட்டமைப்பு போன்ற அனைத்துலக நிறுவனங்களுக்கு முடிந்தவரை ஒருமித்த ஆலோசனைகளை வழங்குவதிலும் அது முக்கியப் பங்காற்றியது.
மேல் விவரங்களுக்கு
International Forum for Information Technology in Tamil. Accessed 1 August 2025. https://www.infitt.org/
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |