முகமது அப்துல் ஜலீல் (பி. 1965) பரவலாக மதிக்கப்படும் ஒரு சிங்கப்பூர்க் கொடையாளர். சமூக, பண்பாட்டுப் புரவலர். அவரது தாராள மனப்பான்மை, கல்வி, சமூகநலம், மொழி முதலிய துறைகளில் பலருக்கும் பயனளித்துள்ளது. அவர் நிறுவிய எஸ்.எம். ஜலீல் அறக்கட்டளை அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஆதரவளிப்பதோடு தமிழ்ச் சமூகத்தில் ஒரு முன்னணிக் கொடையாளியாகவும் விளங்குகிறது.
ஜலீலுக்கு ஐந்து வயதானபோது அவரது குடும்பம் இந்தியாவின் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்தது. தொடக்கத்தில் அவர் தம் தந்தையின் பெட்டிக்கடையை நடத்த உதவியதோடு செலவுகளைச் சமாளிக்க அவ்வப்போது சிறுசிறு வேலைகளையும் செய்தார். அத்தகைய எளிய பின்னணியிலிருந்து வந்த அவர், மினி என்விரோண்மெண்ட் செர்விசஸ் என்னும் சுற்றுச்சூழல் சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். அது பின்னர் ஒரு பெரும் பல்தொழில் குழுமமாக வளர்ந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான விடுதிகளை நடத்துதல், தளவாடத் தொழில், இதர சேவைத்துறைத் தொழில்கள் எனப் பல தொழில்களில் அவர் கவனம் செலுத்தினார். இப்போது அந்த நிறுவனம் பல தொழிலாளர் விடுதிகளை இயக்குகிறது.
ஜலீல் தொழிலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள அதேவேளையில், அவருடைய கொடைத்தன்மைக்காக அதிகம் பாராட்டப்படுகிறார். அவருடைய கொடை, சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வியிலிருந்து சமூக நலம்வரை பல்வேறு நோக்கங்களுக்காக நன்கொடை அளித்துள்ளார். தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதியின் நீண்டகால ஆதரவாளரான அவர், 2010 முதல் 6 மில்லியன் வெள்ளிக்குமேல் வழங்கியுள்ளார், அது, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உணவு, போக்குவரத்து, அத்தியாவசியப் பள்ளித் தேவைகள் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளுக்கு உதவியுள்ளது. மேலும், சிங்கப்பூரிலும் தமிழ்நாட்டிலும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகைகள் வழங்க ஜலீல் நிதியளித்துள்ளார். உள்ளூர்த் துணைப்பாட வகுப்பு நிலையங்கள், பள்ளிக்குப் பிந்தைய பராமரிப்புத் திட்டங்கள், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மின்னிலக்க அறிவூட்டும் திட்டங்கள் ஆகியவற்றுக்கும் அவர் ஆதரவளிக்கிறார்.
குற்றவாளிகளுக்கு இரண்டாம் வாய்ப்புகளை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ள ஜலீல், முன்னாள் குற்றவாளிகளின் தொழில் சார்ந்த திறன் பயிற்சிக்கு ஆதரவாக 209,000 வெள்ளி நன்கொடை அளித்து, அவர்கள் நல்ல வேலைகளில் அமர்ந்து சுதந்திரமாக வாழ உதவியுள்ளார்.
ஜலீல் தமிழ்ப் பண்பாட்டையும் மொழியையும் வளர்ப்பதில் பெரும் அக்கறை கொண்டவர். சுதந்திரச் சிங்கப்பூரின் 50-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 1965-க்கும் 2015-க்கும் இடையே பதிப்பிக்கப்பட்ட, 350-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை 2015-இல் மின்னிலக்கப்படுத்திய தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்துக்கு அவரே முதன்மை நன்கொடையாளர்.
பொருளியல் மேம்பாட்டோடு பண்பாட்டு மரபுடைமையும் வளர்க்கப்படவேண்டும் என்பதில் அவருக்குள்ள நம்பிக்கையைக் காட்டும் வகையில் அவருடைய நன்கொடைகள் தமிழ் இலக்கிய விழாக்கள், நிகழ்கலைகள், சமூக ஊடகங்கள் முதலியவற்றுக்கும் ஆதரவளித்துள்ளன.
முகமது அப்துல் ஜலீலின் கொடைத் தன்மையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்குச் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் சமூக ஆதரவாளர் விருது, 2022-இல் அதிபரின் தொண்டூழியம், கொடைத்தன்மை விருது முதலிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேல்விவரங்களுக்கு
Singapore Medical Journal Foundation. Accessed 1 August 2025. https://www.smjfl.com.sg/about-us.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |