இளங்கோவன் (பி. 1957) சிங்கப்பூர்த் தமிழ்க் கலையுலகில் ஒரு தனித்துவமிக்கக் கலைஞர். சர்ச்சைக்குரிய கருப்பொருள்களையும் சமூகத்தின் இருண்ட பகுதிகளையும் கலையின் மூலம் ஆராய்ந்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும், கவிதை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைவடிவங்களில் படைப்புகளை வெளியிட்டவர். சிங்கப்பூரில் புதுக்கவிதை வடிவத்தைப் பயன்படுத்திய முதல் சில கவிஞர்களுள் ஒருவர். கலை ஆசிரியர், கலை நிர்வாகி, இதழியலாளர், திரைக்கதையாளர், மொழிபெயர்ப்பாளர். அக்கினிக் கூத்து என்னும் நாடக நிறுவனத்தை உருவாக்கி நடத்துபவர்.
ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் படித்த அவர், 1996-ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலிய அகாடமி ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் கல்விக் கூடத்தில் நாடக இயக்கத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் நாடக இயக்கத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
இளங்கோவன் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களைப் போலன்றி, ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். அவர் தமது சொந்தப் படைப்புகளையும் மற்றவர்களின் படைப்புகளையும் இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்பதைவிட மீளுருவாக்கம் செய்தார். விழிச்சன்னல்களின் பின்னாலிருந்து (1979) என்னும் கவிதைத் தொகுப்பு அவரது முதல் வெளியீடு. தொடர்ந்து, நாடகங்களும் கவிதைகளும் அடங்கிய பத்துக்கும் மேற்பட்ட நூல்களை அவர் வெளியிட்டுள்ளார். அவரது கவிதைகள் சிங்கப்பூர்க் கவிதை (1985) உள்ளிட்ட தேசியத் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.
இளங்கோவனின் பெரும்பாலான படைப்புகள் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டாலும், சில நாடகங்கள் விரும்பத்தகாத உள்ளடக்கம் கொண்டவை எனக்கருதப்பட்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன. அவற்றுள் நன்கு அறியப்பட்ட தலாக் (1998) என்ற நாடகமும் அடங்கும். அரசின் முடிவுகளுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். முன்னணிக் கலைஞர்கள் சிலரும் அம்முடிவுகளை விமர்சித்தனர்.
இளங்கோவன், 1987 முதல் 2000 வரை தேசியக் கலை மன்றத்தில் கலை நிர்வாகியாகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், சிங்கப்பூர்ப் புனைவுகள் (1990), 25ஆவதுக்கான சொற்கள்: சிங்கப்பூர் எழுத்தாளர்களின் வாசிப்புகள் (1990) முதலிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெளியீடுகளுக்கு இணை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணிகளை ஆற்றினார்.நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் வெளியிடப்பட்ட உள்ளூர் இலக்கிய, கலை இதழான சிங்காவின் ஆசிரியர்களுள் ஒருவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். சுந்தர ராமசாமி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முன்னணி எழுத்தாளர்களை அவர் தேசியக் கலை மன்றத்தின் வருகைதரு எழுத்தாளர்களாகத் தேர்ந்தெடுத்தது, சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேசியக் கலை மன்றத்திலிருந்து விலகியபிறகு, அவர் லாசால்-எஸ்ஐஏ கலைக் கல்லூரியில் நாடகம் கற்பித்தார். பின்னர் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலை மையத்தின் இலக்கியக் கலைக் குழுவில் பங்களித்தார்.
அவரது படைப்புகளும் கலை நிர்வாகியாக அவர் ஆற்றிய பணியும் சிங்கப்பூரின் கலைக்களத்திற்கு முக்கியப் பங்காற்றின. இளங்கோவன் 1997-இல் தென்கிழக்காசிய எழுத்து விருதளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். மேலும், அவரது நாடகங்களான ஃப்ளஷ், ஊடாடி,1915, ஆகியவை முறையே 2002, 2003, 2005-ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் அனைத்துலக அறக்கட்டளையின் மதிப்புமிக்க சிங்கப்பூர் அனைத்துலக விருது பெற்றன.
மேல்விவரங்களுக்கு
Chua, Alvin. “Elangovan,” Singapore Infopedia. Accessed 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=f562b0bf-b684-46b9-900e-fb4bee5ccc81.
“Elangovan,” AP Writers. Accessed 1 August 2025. https://www.apwriters.org/author/ag0ni3ko6ot9ht5hu7/.
Kootthu, Agni. “Elangovan,” Centre-42. Accessed 1 August 2025. https://www.centre42.sg/archive/profiles/1435/elangovan/.
“சிங்கை இளங்கோவன் நேர்காணல்,” ம.நவீன், 3 August 2011. https://vallinam.com.my/navin/?p=887.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |