ஓர் எளிமையான தொடக்கப்பள்ளியாகத் தன் வரலாற்றைத் தொடங்கிய உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், தற்போது பன்முகத்தன்மைகொண்ட கல்விக்கூடமாகவும் சமூகத்தோடு ஒன்றிணைந்து செயலாற்றும் வளமை நிலையமாகவும் விளங்குகிறது.
அந்நிலையத்தின் வரலாறு சிங்கப்பூர்த் தமிழ்க்கல்வி வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மேலும், ஒரு கல்விக்கூடம் என்பதற்கும் மேலாக, சமூக அமைப்புகளோடு கைகோத்துப் பல தமிழ்மொழிசார்ந்த நிகழ்வுகளுக்கு ஏற்ற தளமாகவும் நிலையம் வளர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த 1945-ஆம் ஆண்டில், செயிண்ட் ஜியார்ஜஸ் தெரு அரசினர் தமிழ்ப் பள்ளி என்ற பெயரில் தொடக்கப்பள்ளி ஒன்று நிறுவப்பட்டது. ஆனால், மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வந்தமையால் 1975 முதல் தொடக்கப்பள்ளியாக இராமல், தமிழ்ப்பாடம் இரண்டாம் மொழியாக வழங்கப்படாத ஆங்கிலப்பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்கான தமிழ்மொழி மையமாகத் தொடர்ந்து இயங்கியதால், 1978-ஆம் ஆண்டு செயிண்ட் ஜார்ஜஸ் சாலைத் தமிழ் நிலையம் எனப் பெயரிடப்பட்டது. பின்னர்க் கூடுதல் வசதிகளோடு, 1982-இல், 588C சிராங்கூன் சாலையில் அமைந்திருந்த முன்னைய பீட்டி உயர்நிலைப்பள்ளிக் கட்டடத்திற்கு இடம்பெயர்ந்தது. அதோடு, செயிண்ட் ஜார்ஜஸ் தமிழ்மொழி நிலையம் என்று பெயர்மாற்றமும் கண்டது.
இதற்கிடையே, மெக்ஸ்வெல் ரோட்டில் அமைந்திருந்த சிங்கப்பூரின் ஒரே தமிழ் உயர்நிலைப்பள்ளியான உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளியிலும் (காண்க: தமிழ்ப்பள்ளிகள்) மாணவர் எண்ணிக்கை சரிந்து, 1982-இல் மூடப்பட்டது. ஆயினும், சிங்கப்பூர்த் தமிழ்க் கல்வி வரலாற்றில் ஒரு சகாப்தத்தை ஏற்படுத்திய அப்பள்ளியின் பெயரைத் தக்கவைக்கும் பொருட்டு, செயிண்ட் ஜார்ஜஸ் தமிழ்மொழி நிலையம், 1983-இல் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் எனப் பெயர்மாற்றம் கண்டது. பின், நிலையத்தின் கற்றல் கற்பித்தல் வசதிகள் மறுசீரமைக்கப்பட்டு, 2001-இல், அன்றைய துணைப் பிரதமர் பேராசிரியர் எஸ். ஜெயக்குமார் மேம்படுத்தப்பட்ட உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தைத் திறந்துவைத்தார். நிலையம் தமிழ்க் கலை, இலக்கியம், பண்பாட்டைப் போற்றும் தேசிய தமிழ்மொழி வளமை நிலையமாகவும் செயற்படும் என அவர் அறிவித்தார்.
கற்றல் கற்பித்தலின் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு கல்வி அமைச்சு, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்திற்கென வசதிகள் மிக்க ஒரு புதிய கட்டடத்தைக் கட்டித்தர முன்வந்தது. எண் 2 பீட்டி ரோடு முகவரியில் அமைந்த அப்புதிய கட்டடத்தில், 20 ஜூன் 2011 முதல், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் இயங்கத் தொடங்கியது. புதிய வளாகத்தின் அதிகாரபூர்வத் திறப்புவிழா, 4 ஆகஸ்டு 2012 அன்று நடந்தேறியது. அன்றைய துணைப் பிரதமரும் நிதியமைச்சரும் மனிதவள அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம், அன்றைய பிரதமர் அலுவலக அமைச்சரும் உள்துறை, தொழில் வர்த்தக அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் ஆகியோர் வளாகத்தைத் திறந்து வைத்தனர். சிங்கப்பூரின் ஒரே தமிழ்க்கல்வி மரபுடைமையகமும் அவ்வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தேசியக் கல்விக் கழகத்துடன் இணைந்து 2020-ஆம் ஆண்டுமுதல் மாணவ ஆசிரியர்களுக்கு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் அனுபவங்களை அமைத்துத்தரும் பொருட்டு மாணவ ஆசிரியர் பணியிணைப்புத் திட்டத்தை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேல்விவரங்களுக்கு
Doraisamy, Theodore R. 150 Years of Education in Singapore, Singapore: TTC Publications Board, 1969.
Umaar Pulavar Tamil Language Centre. Accessed 1 August 2025. https://www.uptlc.moe.edu.sg/
இராஜிக்கண்ணு, மா. (2016). சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி ; வரலாற்று நோக்கில் 1950-2009. சிங்கப்பூர்: RPA Publications. (Call no.: RSING 372.6 IRA)
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |