தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், சிங்கப்பூரின் மின்னிலக்கக் கட்டமைப்பிற்கு அடித்தளம் அமைத்துள்ளதோடு தகவல் தொடர்பு, ஊடகத் துறைகளை மேம்படுத்துவதிலும் சீரமைப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த வகையில், அது சிங்கப்பூரில் தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் மட்டுமின்றித் தமிழ் ஊடகங்கள் வளரவும் நீடித்திருக்கவும் முக்கியப் பங்காற்றுகிறது.

சிங்கப்பூரில் தகவல், தொடர்புத் தொழில்நுட்பங்கள் 1990-களில் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியபோது, ஆணையமும் அதன் முன்னோடி அமைப்புகளும் தகவல் தொழில்நுட்பத் தளங்களில் தமிழ்ப் பயன்பாட்டை எளிதாக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டன. மேலும், 2000-இல், தமிழ் இணையப் பயன்பாட்டை வழிநடத்தவும் ஊக்குவிக்கவும் தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழுவை நிறுவியது. உள்ளடக்க உருவாக்கம், வணிகம், தொழில்நுட்ப மேம்பாடு, சமூகப் பயன்பாடு எனக் குழுவின் பல்வேறு முயற்சிகளுக்கு ஆணையம் நிதியுதவி வழங்கியது. குறிப்பாக, சிங்கப்பூரின் முதல் தமிழ் ஒளிவழி எழுத்து உணரித் தொழில்நுட்பத்தை உருவாக்க ஆணையம் கணிசமான மானியம் வழங்கியது. சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துடன் இணைந்து குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கணினிகளை வழங்கியது மற்றொரு முக்கியப் பங்களிப்பாகும். தமிழ் இணையப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஆணையம், பங்காளி அமைப்புகளுடன் இணைந்து தமிழ் இணைய வளர்ச்சியைக் காட்சிப்படுத்தும் தகவல் தொழில்நுட்ப விழாக்களையும் ஏற்பாடு செய்தது. அத்தகைய முயற்சிகளின் வாயிலாக, 2000-களின் நடுப்பகுதியில், இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ முக்கால்வாசிப் பேர் கணினி, இணைய வசதிகளைப் பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை தேசிய சராசரியைவிட அதிகமாகும்.

தமிழ் இணைய முயற்சிகளுக்கு ஆணையம் அளித்த வலுவான ஆதரவு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) தன் நிர்வாகக் குழுவின் செயலகத்தைச் சிங்கப்பூரில் நிறுவ வழிவகுத்தது. சிங்கப்பூரரான அருண் மகிழ்நன் அதன் முதல் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ் இணைய வளர்ச்சிக்காக உத்தமம் செயலகத்தின் முழுநேர ஊழியராக நாராயணன் ஆண்டியப்பனை ஆணையம் நியமித்து ஆதரவளித்தது. உத்தமம் ஏற்பாடு செய்த உலகத் தமிழ் இணைய மாநாடுகளுக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் ஆணையம் தொடர்ந்து ஆதரவளித்து வந்தது. 

தேசிய மொழிக்கொள்கைகளுக்கு ஏற்ப, சிங்கப்பூர் அரசாங்கம் மொழி தொடர்பான தொழில்நுட்பங்களில் தொடர்ந்து தமிழையும் சேர்த்துக்கொண்டு வருகிறது. இவற்றுள் சிங்பாஸ் என்னும் தேசிய அடையாளச் செயலி, இணைய வழி மோசடி எதிர்ப்பு உள்ளிட்ட தனிநபர் தரவுப் பாதுகாப்புக் கொள்கைகள், விருப்பமற்ற அழைப்புகளைத் தவிர்ப்பதற்கான பதிவு எனப் பல அரசாங்க மின்னிலக்கச் சேவைகளும் அடங்கும். மிக முக்கியமாக, தென்கிழக்காசியாவின் முதல் பெரும் மொழி மாதிரிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிங்கப்பூரின் அண்மைய முயற்சியில் தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது. 

ஊடகத் துறையில், தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க மீடியாகார்ப் நிறுவனத்திற்கும் பிற தனியார் நிறுவனங்களுக்கும் ஆணையம் வழிகாட்டுவதோடு நிதியுதவியும் செய்கிறது. ஊடக மேம்பாட்டிற்குப் பொறுப்பான அரசு அலுவலகமாகச் செயல்படும் ஆணையம், ஊடகத்துறையை ஒழுங்குமுறைப்படுத்தும் அதே நேரத்தில் அதன் மேம்பாட்டிற்கும் உதவுகிறது. தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் தரப்படுத்தப்பட்ட நிலையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நடைமுறை நெறிமுறைகளை வெளியிடுகிறது. உள்ளூர் உள்ளடக்க உருவாக்கம், ஒளி/ஒலிபரப்பு நிகழ்ச்சிகள், திரைப்படத் தயாரிப்பு முதலியவற்றை ஆதரிப்பதற்காக, பொதுச் சேவை மின்னிலக்க ஊடகப் பங்காளித்துவ நிதி, ஊடகத் திறன் மேம்பாட்டுத் திட்டம், ஊடக நிறுவன வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதித் திட்டங்களையும் ஆணையம் முன்வைத்துள்ளது.  



மேல்விவரங்களுக்கு
Infocomm Media Development Authority. Accessed on 1 August 2025. https://www.imda.gov.sg/ 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of Fenruary 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA