சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், தமிழ் நாட்டிலிருந்து குடியேறிய தமிழ் முஸ்லீம்கள், அவரவர் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்காக 1880-களில் நிறுவிய சுய உதவிக் குழுக்களுள் மிகப் பழமையானது. மேலும், உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளியினை நிறுவிய அமைப்பு என்னும் முறையில், அது சிங்கப்பூர்த் தமிழரிடையே தனி மதிப்பு பெற்றிருக்கின்றது. 

கல்விச் சேவையுடன், பல்வேறு சமூகச் சேவைகளிலும் சங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. திருமண ஆயத்த வகுப்புகள், இறுதிச் சடங்குச் சேவைகள், சமரசச் சேவைகள் போன்றவை அவற்றுள் சில. அமைப்பின் மற்றொரு குறிப்பிடத்தக்க சேவை, நிதிக் கூட்டுறவு. இந்திய முஸ்லிம் அமைப்புகளுள், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் மட்டுமே 1948-இல் தொடங்கப்பட்ட நிதிச்சேவைப் பிரிவைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. புதுமையான சேமிப்புத் திட்டங்கள், சிறு கடன்கள், அடிப்படை வங்கிச் சேவைகள் முதலியவற்றை அது அளித்து வருகிறது.

அமைப்பை 1941-இல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்தவர் இமாம் ஹஃபீஸ் எஸ்.ஏ. முகமது. பொதுச் செயலாளராகப் பதவி ஏற்றவர் அ.நா. மைடின். சமயக் கல்வி, சமூக நலம், மொழி, பண்பாடு முதலியவற்றிற்கு உதவுவதே அமைப்பின் முக்கிய நோக்கம். சிங்கப்பூரில் தமிழ்மொழியைப் பேணி வளர்த்ததில் அமைப்புக்குப் பெரும்பங்கு உண்டு. எடுத்துக்காட்டாக, 1946-இல் அது நிறுவிய உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளி. அப்பள்ளி, 1960-ஆம் ஆண்டு, தென்கிழக்காசியாவின் முதல் தமிழ் உயர்நிலைப் பள்ளியாக வளர்ந்திருந்தது. சிங்கப்பூரில் தரமான தமிழ்மொழிக் கல்வியை உருவாக்குவதில் அப்பள்ளி பெரும் பங்காற்றியது. அப்பள்ளியில் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள் பலர், கல்வி, ஊடகம், தகவல் தொடர்பு, நாடகம், இதழியல், இலக்கியம் முதலிய துறைகளில் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகின்றனர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகத் தமிழ் முஸ்லிம் சமூகம் ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில், சிங்கப்பூர் மத்திய வர்த்தக வட்டார வீதிகளில் ஒன்றுக்கு 1952-இல், கடையநல்லூர் ஸ்ட்ரீட் என அரசாங்கம் பெயரிட்டது.

தம் சொந்தச் சமூகத்துக்கு அப்பால், கொள்கை, நிர்வாகம் பற்றி ஆலோசனைகள் வழங்கும் வேறு பல  முஸ்லிம் அமைப்புகளுக்கும் இச்சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவற்றுள், சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றமான மூயீஸ் மலாய்-முஸ்லிம் சுய உதவிக் குழுவான மெண்டாக்கி ஆகியன அடங்கும். இந்தியர் சுய உதவிக் குழுவான சிண்டாவுக்கும் அது ஆதரவளித்து வருகிறது. மற்ற சமயத்தவருடனான உரையாடல்கள், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் வழி, அது சமயங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் நல்லுறவையும் ஊக்குவிக்கின்றது. அமைப்பு, நூல்களை வெளியிடுவதற்கும் தூண்டுகோலாய் இருந்திருக்கிறது. அவற்றுள் ஒன்று, முஸ்லிம் சமூகம், அதன் அமைப்புகள், பிரபலங்கள் பற்றிய சுருக்கமான வரலாறான சிங்கப்பூர்த்  தமிழ் முஸ்லிம்கள் (தமிழ்ப் பதிப்பு 2015, ஆங்கிலப் பதிப்பு 2021) எனும் நூல். மேலும், 2015-இல் பரக்கத் என்னும் ஆவணப்படத்தையும் அது தயாரித்தது. சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் வகையில் ஒன்றுபட்ட, துடிப்புமிக்க முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்கும் லட்சியமே சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தொடர்ச்சியான சேவைக்கு உந்துசக்தியாக இருந்திருக்கிறது. அமைப்பில் தற்போது கடையநல்லுருக்கு அப்பால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1500 இந்திய முஸ்லிம்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.




மேல் விவரங்களுக்கு
Singapore Kadaiyanallur Muslim League. Accessed 1 June 2025. http://www.skml.sg/
மஷுத்தூ அப்துல் ரஹிமான், ராஜா முகமது. "சிங்கப்பூர்: சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக், [2022]." (Call no. 305.894811 MAS)

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.







Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA