பங்குனி உத்திரம், பங்குனி மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) பௌர்ணமி நாளன்று இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான திருவிழா. சிங்கப்பூரில், இவ்விழா நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தைப் பெறவும் உகந்த நாளாகப் பெரும்பாலும் தமிழர்களால் அனுசரிக்கப்படுகிறது. அத்தகைய அம்சங்களில் பங்குனி உத்திரமும் தைப்பூசத்தைப் போன்றதே. மேலும், முருகனுக்கும் தெய்வானைக்கும் நடந்த தெய்வீகத் திருமணத்தை நினைவுகூரும் நாளாகவும் அவ்விழா கொண்டாடப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும், யீஷூன் பகுதியில் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் மரத்திலோ உலோகத்திலோ செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட காவடிகளைச் சுமந்தும் தங்கள் முதுகில் அலகுகளால் இணைக்கப்பட்ட தேர்களை இழுத்துச் சென்றும் பாற்குடங்களைக் காணிக்கையாகச் செலுத்தியும் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். கோயில் அமைந்துள்ள யீஷூன் தொழிற்பேட்டைக்குள் 1.2 கிலோமீட்டர் தொலைவுக்குப் பக்தர்கள் ஊர்வலமாகச் செல்வார்கள்.
புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் இத்திருவிழா 1967-ஆம் ஆண்டுமுதல் பாற்குடம் கொண்டாடப்படுகிறது. அப்போது அக்கோயில் நேவல் பேஸ் வட்டாரத்தில் அமைந்திருந்தது. அன்று கோயில் பூசாரியாக இருந்த சிவசாமி பண்டாரம் ஆறு பக்தர்களுடன் காவடிகளை ஏந்தி இவ்விழாவைத் தொடங்கிவைத்தார். காலவோட்டத்தில், பங்குனி உத்திரக் கொண்டாட்டம் இக்கோயிலில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. சுமார் 300 பக்தர்கள் அலகுக் காவடிகளை ஏந்தியும், 2,000-த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாற்குடங்களைச் சுமந்தும் செல்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும், பங்குனி உத்திரம் 10,000 முதல் 15,000 வரையிலான பக்தர்களை ஈர்க்கிறது. அருகிலுள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக விழாவில் பங்கேற்கப் பயணம் மேற்கொள்ளும் மலேசியப் பக்தர்களும் இதில் அடங்குவர்.
பங்குனி உத்திரத்தின் பாரம்பரியக் கொண்டாட்டங்களில் திருமுழுக்கு, விரதம், முருகப் பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் முதலியவை அடங்கும். பக்தர்கள் பலர் திருவிழாவிற்கு முந்தைய வாரங்களில் உடலையும் மனத்தையும் தூய்மைப்படுத்தச் சைவ உணவு முறையையும் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கின்றனர். இந்தக் கொண்டாட்டத்தின்போது எழில்மிகுந்த கோயில் அலங்காரங்கள், ஆன்மீக இசை, பக்திப்பாடல்கள் முதலியவை பங்கேற்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஆழ்ந்த ஆன்மீகச் சூழலை உருவாக்குகின்றன.
மேல்விவரங்களுக்கு
Kaur, Amrita. “Coronavirus: Hindu Chariot and Foot Procession Here Cancelled.” The Straits Times, 15 March 2020. https://www.straitstimes.com/singapore/coronavirus-hindu-chariot-and-foot-procession-here-cancelled.
“Marking Panguni Uthiram Festival on a Smaller Scale.” The Straits Times, 29 March 2021. https://www.straitstimes.com/singapore/marking-panguni-uthiram-festival-on-a-smaller-scale.
“A Lesser-Known Hindu Festival with a Kavadi Procession: Panguni Uthiram.” The Long and Winding Road, 20 March 2011. https://thelongnwindingroad.wordpress.com/2011/03/20/a-lesser-known-hindu-festival-with-a-kavadi-procession-panguni-uthiram/.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |