பி. கிருஷ்ணன்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

புதுமைதாசன் என்னும் புனைபெயருடைய பி. கிருஷ்ணன் (பெருமாள் கிருஷ்ணன்) (பி. 1932) சிங்கப்பூர் ஒலிபரப்பு, இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்துலகில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து எழுதிவருவோர் அரிது. அத்தகைய எழுத்துப் பயணத்தில் சிறுகதைகள், கட்டுரைகளுடன் வானொலிக்காக நூற்றுக்கணக்கான நாடகங்களை எழுதியவர், ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களைத் தமிழில் தனித்துவத்துடன் மொழிபெயர்த்தவர் என்னும் பெருமை கிருஷ்ணனுக்கு உண்டு.  

மலேசியாவின் ஜொகூர் பாருவில் பிறந்த கிருஷ்ணன் அங்கு மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில் (1942-45), அவரது தொடக்கக்கல்வி தடைப்பட்டது. போருக்குப்பின், 1947-இல், சிங்கப்பூருக்கு வந்தவர் பதின்ம வயதிலேயே மளிகைக்கடை, துணிக்கடைகளில் வேலைபார்த்துக்கொண்டு கடுமையான உடலுழைப்புக்கு இடையே இரவிலும் ஓய்வுநாள்களிலும் நூல்வாசிப்பின் வழியாகத் தாமே தமிழ் கற்றார். கிடைத்த சொற்ப ஊதியத்திலும் ஒருபகுதியை நூல்கள் வாங்கச் செலவிட்டார். சொந்த ஆர்வத்தினால் ச.சா. சின்னப்பனார் போன்ற தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கணமும் பயின்றார். இந்தக் காலக்கட்டத்தில்தான் முதன்முதலாகத் தமிழ் முரசில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். குறிப்பாக, தமிழ் முரசில் நடந்த ‘புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை’யில் (1951-52) பல கட்டுரைகள் எழுதினார். புதுமைப்பித்தனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டுப் புதுமைதாசன் என்னும் புனைப்பெயரை வைத்துக்கொண்டார். பிறகு, 1952-இல், பிரிட்டிஷ் ராணுவத் தளமொன்றில் தொழில்நுட்பத் துணையாளாக வேலைக்குச் சேர்ந்தார். தமிழ் முரசில்1953-இலிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். முறையான கல்வியைத் தொடரவேண்டி ஆங்கிலோ மலாய் மாலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலிருந்து தொடங்கி, பணிச்சூழல் காரணமாக விட்டுவிட்டுப் படித்தார் என்றாலும், 1967-இல் சீனியர் கேம்பிரிட்ஜ் சான்றிதழ் பெற்றார். அக்காலக்கட்டத்தில், வானொலியில் 1951-இல் தொடங்கப்பட்டிருந்த, பள்ளிகள் ஒலிபரப்புப் பிரிவுக்காகக் குறுநாடகங்களை எழுதுவதிலும் நடிப்பதிலும் சுமார் பத்தாண்டுகள் (1951-61) பகுதிநேரக் கலைஞராக ஈடுபட்டிருந்தார். மேலும் முன்னேற்றம், சிந்தனை ஆகிய சஞ்சிகைகளில் துணையாசிரியராகவும் (1954-55) பணியாற்றினார். அதன்பின், 1962-இல், அறிவிப்பாளராகச் சிங்கப்பூர் வானொலியின் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார். அடுத்த 30 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து, மூத்த நிர்வாகத் தயாரிப்பாளராக 1992-இல் ஓய்வுபெற்றார். 

வானொலியில் பணியாற்றியபோது மாடிவீட்டு மங்களம் (1962), அடுக்குவீட்டு அண்ணாசாமி (1969) ஆகிய புகழ்பெற்ற நாடகங்கள் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களைக் கிருஷ்ணன் எழுதினார். மேலும் செய்தி வாசிப்பு, கதாகாலட்சேபம், இசைநாடகங்கள், தேசிய தின அணிவகுப்பு, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான நேரடி வருணனை, நடிப்பு, பாட்டு, இயக்கம், நிர்வாகம், தயாரிப்பு என ஒலிபரப்பின் பல்வேறு தளங்களிலும் தீவிரமாகவும் தொடர்ந்தும் செயல்பட்டார். ஒலிபரப்புத் துறையில் அவர் செய்யாத வேலையே இல்லை என்னுமளவுக்கு அவருடைய பணி படர்ந்திருந்தது. ஓய்வுபெற்றபின் தம் சிறுகதைகளைப் புதுமைதாசன் சிறுகதைகள் (1993) என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். அத்தொகுப்பு சிங்கப்பூர்ப் புத்தக மன்றத்தின் பாராட்டு விருதைப் (1994) பெற்றதோடு சிங்கப்பூர்த் தமிழிலக்கியப் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய ஒலிபரப்புப் பணியின் தொடக்கக்காலத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் ஒன்றிரண்டைச் சுருக்கமாக மொழிபெயர்த்திருந்த கிருஷ்ணன், பணி ஓய்வுபெற்றபிறகு, மெக்பெத் (1996) தொடங்கி ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்கள் பலவற்றை முழுமையாகவும் ஆங்கில மூலத்துக்கு நெருக்கமான தமிழ்ப் பாவினங்களைப் பயன்படுத்தியும் மொழிபெயர்த்து வெளியிடத் தொடங்கினார். அவைபோக, அடுக்குவீட்டு அண்ணாசாமி (2000) முதலிய நாடகங்களும், விலங்குப்பண்ணை (2008) உள்ளிட்ட நெடுங்கதைகளின் மறுஆக்கங்கள், சருகுகள் (2009) என்னும் உலகப் பெருங்கதைகள் மொழிபெயர்ப்பு எனப்பல இலக்கியப் படைப்புகளும் நூலாக்கம் பெற்றுள்ளன.

கிருஷ்ணன் தம் ஒலிபரப்புத்துறை பங்களிப்புகளுக்காக நீண்டகாலச்சேவை விருது (1987), செயல்திறன் விருது (1992) உள்ளிட்ட விருதுகளையும், இலக்கியச் சேவைக்காகத் தமிழவேள் விருது (1998), தென்கிழக்காசிய எழுத்து விருது (2005) உள்ளிட்ட பல விருதுகளையும் கலைத்துறையில் ஆக உயர்ந்த விருதாகிய கலாசாரப் பதக்கத்தையும் (2008) பெற்றுள்ளார். முறையான கல்வியோ குடும்ப ஆதரவோ இன்றி, ஒலிபரப்புத் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும் இலக்கியத்தில் 70 ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்ந்து தீவிரமான முன்னோடி முயற்சிகளைச் செய்து, அத்துறைகளில் ஈடுபடும் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்குபவராகக் கிருஷ்ணன் அறியப்படுகிறார்.



மேல் விவரங்களுக்கு
மீண்டு நிலைத்த நிழல்கள், நேர்காணல்கள் தொகுப்பு: ம. நவீன், வல்லினம் வெளியீடு, 2018
பி. கிருஷ்ணனின் (புதுமைதாசன்) இலக்கியப் படைப்புகள் - ஓர் ஆய்வு, தொகுப்பாளர்கள்: சுந்தரி பாலசுப்ரமணியம், யசோதா தேவி நடரஜன்.  தொகுப்பாசிரியர்கள்: ஆ.ரா. சிவகுமாரன், பி. கிருஷ்ணன், தேசிய நூலக வாரிய வெளியீடு, 2012
புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை (1951-52), முனைவர் எம்.எஸ்.ஶ்ரீலக்‌ஷ்மி, தருமு பப்ளிகேஷன்ஸ், 2006
Singapore: The Encyclopedia, edited by Tommy Koh, Timothy Auger, Jimmy Yap, Ng Wei Chian, published by Editions Didier Millet and National Heritage Board, 2006
Prasad, Vina Jie-Min, Ho, Lee-Ling “S. R. Nathan.” Singapore Infopedia. Published 22 December 2014. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=e7f37953-d4c0-496f-9b47-4e023eef141c 
P. Krishnan. “P. Krishnan@90.” YouTube video, 1:24:36, Singapore Tamil. https://www.youtube.com/watch?v=Lf2AxdGzFYw
Vallinam. Accessed 1 August 2025. https://vallinam.com.my/version2/?p=8835

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA