தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம் 1887-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு சிங்கப்பூரின் ஆகத் தொன்மையான தமிழ்த் தேவாலயமாக விளங்குகிறது. இந்தியத் துணைக்கண்டம், அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்கு மறைப்பணியாளர்களை அனுப்பும் இந்தத் தேவாலயம், இம்மானுவல் தமிழ் வருடாந்திர மாநாட்டின்கீழ் ஏழு சபைகளுக்குத் தாய்த் திருச்சபையாகத் திகழ்கிறது.

தென்னிந்திய வருடாந்திர மாநாடு, 1885-இல் ரெவரண்ட் வில்லியம் எஃப் ஓல்டம், ரெவரண்ட் தோபர்ன், அவரது மனைவி ஆகியோரை மெதடிஸ்ட் திருச்சபையின் அடித்தளத்தைச் சிங்கப்பூரில் நிறுவும் நோக்கத்துடன் அனுப்பிவைத்தது.  பெங்களூரில் பிறந்த ஓல்டம் தமிழில் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்ததால், அவருடைய அடிப்படைப் பணிகளுக்கு மேலாக, சனிக்கிழமைகளில் சிறு சிறு இந்தியக் குழுவினருக்கான கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்; ஞாயிற்றுக்கிழமைகளில் சிறைச்சாலையில் உள்ள தமிழ்க் கைதிகளுக்கான ஆராதனைகளையும் நடத்தினார். இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்துவரப்பட்ட ரெவரண்ட் சி. டபிள்யூ. அண்டர்வுட்டை முதல் பாதிரியாராகக் கொண்டு நிறுவப்பட்ட தமிழ் மெதடிஸ்ட் தேவாலயத்தின் வளர்ச்சியில் ஓல்டம் பெருந்துணை புரிந்தார். அண்டர்வுட் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதன்வழி தேவாலயத்தின் செல்வாக்கை விரிவுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். அவர் தமிழ் ஆண்கள் பள்ளி (1885), தமிழ்ப் பெண்கள் பள்ளி (1887) (தற்போதைய மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி) ஆகிய இரு தமிழ்ப் பள்ளிகளையும் நிறுவினார். 

ஷார்ட் ஸ்ட்ரீட்டில் ஓர் ஆலயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம், 1915-இல் நிதி திரட்டத் தொடங்கியது. அடுத்து, 1925-இல் பிஷப் டைட்டஸ் லோ புதிய தேவாலயக் கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். மறு ஆண்டு அந்த ஆலயக் கட்டுமானம் நிறைவடைந்தது. புதிய தேவாலயத்தின் பாதிரியாராக ரெவரண்ட் எஸ்.எஸ். பாக்கியநாதன் பணியாற்றினார். பின்னர், ரெவரண்ட் டி.ஆர். துரைசாமி, 1951 முதல் 1954 வரை ஆலயத்தில் திருப்பணி ஊழியம் செய்தார். அவர்தாம் பின்னாளில் சிங்கப்பூர், மலாயா மெதடிஸ்ட் திருச்சபையின் முதல் தமிழ் பிஷப் ஆனவர். அவருக்குப் பின் பொறுப்பேற்ற ரெவரண்ட் ஆர். பிரபுதாஸ் சரிந்துவரும் உறுப்பினர் எண்ணிக்கையைக் கவனத்தில் கொண்டு அதனைச் சமாளிக்கும் விதமாக 1969-ஆம் ஆண்டில், தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும் இருமொழி ஆராதனைகளை அறிமுகப்படுத்தினார். 

இளையர், பெண்கள், ஆண்களுக்கெனத் தனித்தனி ஐக்கியம், ஞாயிற்றுக்கிழமைப்  பள்ளி ஆகியவற்றோடு, தமிழ்க் கிறிஸ்துவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் சமூகநலத் திட்டங்களையும் அந்தத் தேவாலயம் வழங்குகிறது. தமிழ் மெதடிஸ்ட் உறுப்பினர்களால் இணைந்து நிறுவப்பட்ட இந்திய நண்பர்கள் ஐக்கியம், தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்துள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கிறது. தொடக்கக்காலங்களில் ‘லிட்டில் இந்தியா’ வட்டாரத்தில் கிறிஸ்துவ நற்செய்தி அறிவிக்கும் இறைப்பணியில் கவனம் செலுத்திய அந்த ஐக்கியம், தற்போது பிரார்த்தனைக் கூட்டங்கள், வேதாகம வகுப்புகள், சமூக நடவடிக்கைகள், தீவு முழுவதும் பரந்திருக்கும் ஜெபக் குழுக்கள், ஆங்கில வகுப்புகள் என விரிவடைந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை உள்ளூர்ச் சமூகங்களுடன் ஒன்றிணைப்பதிலும் அது கவனம் செலுத்திவருகிறது.



மேல்விவரங்களுக்கு
Lau, Earnest. From Mission to Church: The Evolution of the Methodist Church in Singapore and Malaysia, 1885–1976. Singapore: Armour Publishing, 2008.
Tamil Methodist Church. Accessed on 1 August 2025. https://tamilmethodist.sg

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA