முகமது இர்ஷாத், 29 வயதில், நாடாளுமன்ற நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டு ஆக இளைய நியமன உறுப்பினர்களில் ஒருவராக விளங்கினார். அவர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தில் குடிமை, மக்கள் துறைகளைப் பிரதிநிதித்தார். இரண்டரை ஆண்டுகள் நீடித்த தம் பதவிக் காலத்தை 2018-இல் தொடங்கிய அவர், சிங்கப்பூர்-தெற்காசிய மற்றும் சஹாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்க வட்டார நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருந்தார்.
எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிப்பது, சமூக ஒற்றுமையை வளர்ப்பது, மீள்தன்மையுடைய சிங்கப்பூரை உருவாக்குவது முதலிய பிரச்சினைகளை அவர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இர்ஷாத், 2012-இல் தொடங்கப்பட்ட ரோசஸ் ஆஃப் பீஸ் என்னும் அமைப்பை நிறுவி அதன் தலைவராகச் செயற்படுகிறார். அந்த அமைப்பின் நோக்கம், நல்லிணக்கமும் பிணைப்பும் மீள்திறனும் மிக்க சிங்கப்பூரைக் கட்டமைக்க உதவுவது. அதன் நிகழ்ச்சிகள், பல்வேறு இனங்களையும் சமயங்களையும் நாடுகளையும் பண்பாடுகளையும் சேர்ந்த மக்களுக்கிடையே பாலங்களை அமைப்பதன் வழி புரிந்துணர்வை ஆழப்படுத்துவதையும் நம்பிக்கையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டவை.
தொழில்ரீதியாக, இர்ஷாத் ஒரு பன்னாட்டு நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸில் ஆசியானுக்கான அமைப்புசார் நடவடிக்கைகளின் தலைவராக உள்ளார். அவர் சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் லீ கொங் சியான் வணிகத்துறைப் பள்ளியில் ஒரு சார்புநிலை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அதே பல்கலைக்கழகத்தில், அவர் வணிக மேலாண்மையில் இளங்கலைப் பட்டமும் தகவல்தொடர்பு மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இர்ஷாத், தொழில்முறைப் பணிகளோடு தொண்டூழியப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றத்தில் மாவட்ட மன்ற உறுப்பினராகவும் நல்லிணக்கக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார். அவரது மற்ற பொதுநலச் சேவைப் பணிகளில் பின்வருவன அடங்கும்: சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தொண்டூழியர் மேலாண்மைத் துணைக் குழுவின் துணைத் தலைவர், குவீன்ஸ்டவுன் நல்லிணக்க வட்டத்தின் துணைத் தலைவர், இந்திய மரபுடைமை நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்.
பன்னாட்டு அமைப்புகளிலும் இர்ஷாத் சேவையாற்றியுள்ளார். சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்னாட்டுக் குழு, மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மதம் சார்ந்த மற்றும் பாரம்பரிய வழிகளில் அமைதியை ஏற்படுத்துபவர்களின் கட்டமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.
நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அதிபரின் தொண்டூழிய, கொடையாண்மை விருது (2018), முயிஸ் 50 ஊக்கமூட்டும் இளையர் விருது (2018), முன்மாதிரியான பல்மத இளையர் தலைமைத்துவ விருது (2023) உள்ளிட்ட பல விருதுகள் இர்ஷாத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேல்விவரங்களுக்கு
Singapore Management University. “The making of a change-maker.” Accessed 1 August 2025. https://business.smu.edu.sg/master-communication-management/lkcsb-community/making-change-maker
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |