இந்துக்களின் சடங்கான தீமிதியில் பக்தர்கள் திரௌபதி அம்மனின் ஆசியைப் பெறவும் நேர்த்திக்கடனைச் செலுத்தவும் தீக்குழியின்மீது வெறுங்காலுடன் நடந்து செல்வார்கள். நூற்றாண்டுகள் பழமையான இந்த நடைமுறை ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் தொடர்ந்து நடக்கும் திருவிழாவின் நிறைவு விழாவில் 18 தனித்துவமான சடங்குகள் இடம்பெறும். அவை ஒவ்வொன்றும் மகாபாரதத்திலிருந்து குறிப்பிடத்தக்க சில அத்தியாயங்களை மீளுருவாக்கம் செய்கின்றன. மேலும், தீமிதித் திருவிழா முடியும்வரை இரவில் மகாபாரதம் வாசிக்கப்படும்.
தென்னிந்தியாவில் தோன்றிய தீமிதி, இன்று தென்னிந்தியர் புலம்பெயர்ந்து வாழும் பகுதிகள் பலவற்றிலும் பரவியுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் குறிப்பிடத்தக்க விழாக்கள் நடைபெறுகின்றன. சிங்கப்பூரில் ஆகப்பழமையான இந்துக் கோவிலான சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 1840 முதல் நடக்கும் தீமிதி, ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கிறது. அவர்களுள் இந்துக்கள் அல்லாதவர்களும் இந்தியர் அல்லாதவர்களும் அடங்குவர்.
ஐப்பசி மாத (அக்டோபர் நடுப்பகுதி) அமாவாசை அன்று திரௌபதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் சடங்கு தொடங்குகிறது. அனுமனின் உருவம்கொண்ட அக்கொடி, திருவிழாக் காலம் முழுவதும் கோயிலைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.
தீமிதிக்கு முந்தைய வாரங்களில், பல்வேறு கடவுள்களை, குறிப்பாகக் கோயிலின் மூலதெய்வமான மாரியம்மனை வணங்கும் பல்வேறு சடங்குகள் இடம்பெறுகின்றன. மகாபாரதத் தொன்மத்தின்படி கௌரவர் அவையில் அவமானப்படுத்தப்பட்டு ஏறக்குறையத் துகிலுரியப்பட்ட திரௌபதி, தமக்குத் தீங்கிழைத்தோரின் ரத்தத்தால் கழுவப்படும்வரை தம் கூந்தலை முடியப்போவதில்லை என்று சபதம் செய்தார். குருக்ஷேத்திரப் பெரும் போரில் பாண்டவர்கள் கௌரவர்களைத் தோற்கடித்தபிறகு அந்தச் சபதம் இறுதியில் நிறைவேறியது. தீமிதி அன்று, திரௌபதியின் சபதம் நிறைவேறுவதை நடித்துக் காட்டுவதோடு விழா தொடங்குகிறது.
தீமிதியின் இறுதிக் கட்டத்தில் கோயிலின் தலைமைப் பண்டாரம் முதலில் தீக்குழியில் நடந்து செல்வார். அவரைத் தொடர்ந்து பக்தர்கள் தீமிதிப்பார்கள். தீமிதிக்கும் அனைவரும் கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும். தீக்குழியைக் கடப்போர் அதன் மறுமுனையில் அமைந்திருக்கும் ஒரு பால்குழியில் தம் கால்களை நனைத்துக் குளிரச்செய்வார்கள்.
சிங்கப்பூரில், தீமிதி பெரும்பாலும் தென்னிந்தியர்களால், குறிப்பாகத் தமிழர்களால் பின்பற்றப்படுகிறது. ஆண்கள் மட்டுமே தீமிதிக்கலாம். பெண்கள் தீக்குழியில் இறங்கமுடியாது என்றாலும் அதை வலம் வரலாம், பார்வையாளர்களாகவும் பங்கேற்கலாம். இந்துக்களின் விழாவாக இருந்தாலும் பிற இன, சமய, நாடுகளைச் சேர்ந்த ஆண்களும் அவ்வப்போது தீமிதிக்கின்றனர். மேலும் தீமிதி ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஆண்டுதோறும் ஈர்க்கிறது. தீமிதியை இந்து அறக்கட்டளை வாரியமும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
மேல்விவரங்களுக்கு
Gopal, Nalina. “Theemithi (Firewalking Festival).” BiblioAsia., Vol. 18, Issue 3, Oct–Dec 2022. https://biblioasia.nlb.gov.sg/vol-18/issue-3/oct-dec-2022/theemithi-firewalking-festival/#:~:text=Theemithi%2C%20which%20means%20%E2%80%9Cfirewalking%E2%80%9D,including%20devotees%20and%20the%20curious
Vasu, Suchitthra. “Theemithi (Firewalking Festival).” Singapore Infopedia. Accessed on 1 August 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=2a658a41-be04-43ee-88dd-142d9db88e22
“Theemithi.” Roots.sg. Accessed on 1 August 2025. https://www.roots.gov.sg/ich-landing/ich/theemithi#:~:text=Theemithi%20originated%20in%20southern%20India,Temple%20in%20South%20Bridge%20Road
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |